மின்சாரம் இல்லாததால் உப்புக்கு பதில் சர்க்கரை போட்ட அவலம். சுகாதாரமற்ற, சேதமடைந்த சமையல் அறையால் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் அச்சம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் மாவட்டம் ஐய்யங்கார் குளம் ஊராட்சியில் 1924 ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டு 98 ஆண்டுகளை கடந்து நூற்றாண்டை எட்டவுள்ளது .
இந்தப் பள்ளியில் சுமார் 324 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு வகுப்பறையில் 30 மாணவ மாணவிகள் மட்டுமே படிக்க வேண்டுமென நீதிமன்றங்கள் வழிகாட்டி உள்ள நிலையிலும் இந்தப் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறைகளிலும் சுமார் 80 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வரும் அவல நிலை உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே பழுதடைந்த இரண்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடங்கள் இது நாள் வரை கட்டப்படாததால் உள்ள நான்கு வகுப்பறையில் மாணவ மாணவிகள் ஆட்டு மந்தைகள் போல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இட நெருக்கடியால் பள்ளி மாணவ மாணவிகள் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு குறைவாக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
324 மாணவ மாணவிகள் கல்விப் பயிலும் இந்த ஊராட்சி தொடக்கப்பள்ளியில் நீண்ட நாட்களாகவே சமையலறை சேதம் அடைந்த நிலையில் உள்ளது. அருகே உள்ள கட்டிடங்களை இடித்த காரணத்தினால் சமையல் அறைக்கு வழங்கக்கூடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும் சமையல் அறையின் உள்ளே தரைகள் பெயர்ந்து உள்ளதால் எலி பொந்துகள் அதிகரித்து பாம்புகள் நடமாட்டம் உள்ளது என அச்சத்துடன் சமையல் அறையில் பணி செய்யும் பெண்மணிகள் கூறினர்.
சமையல் அறையில் காற்றோட்டம் இல்லாததாலும், வெளிச்சம் இல்லாததாலும் சமையல் செய்யும்போது உப்புக்கு பதில் சர்க்கரையும், மஞ்சள் தூளுக்கு பதில் மிளகாய்த்தூளும் போட்டுள்ளனர். மேலும் சமையல் கேஸ் அடுப்பு பழுதடைந்துள்ளதால் செங்கல்கள் வைத்து தீ மூட்டி அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்கின்றனர்.
அடுப்பு வைத்து சமையல் செய்வதால் புகை மூட்டம் ஏற்பட்டு மாணவ மாணவிகள் கண்களில் தூசும் புகையும் ஏற்பட்டு சுகாதார கேடு விளைவிக்கின்றது என மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஆதங்கத்துடன் கூறினார். அந்த அளவுக்கு அந்த சமையலறை மிகவும் சுகாதாரம் அற்ற தன்மையில் உள்ளது என பெயர் சொல்ல விரும்பாத ஆசிரியர்கள் கூறினார்.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சமையல் செய்யும் பெண்மணிகள் சமையலறையை புதுப்பித்து தருமாறு பலமுறை மனு கொடுத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை என ஆதங்கப்படுகின்றார்கள்.
இந்தப் பள்ளிக்கூடத்தில் அதிகமாக மாணவர்கள் படிப்பதால் நவீன சமையலறை கட்டித் தர வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.