நாகை செருதூர் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடல் கொள்ளையர்களால் தாக்குதல்.

செ.சீனிவாசன்

UPDATED: Apr 30, 2024, 10:01:48 AM

நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் முத்து, முருகவேல், சின்னையன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மீன் பிடி தொழிலுக்காக செருதூர் கிராமத்திலிருந்து சென்ற மீனவர்கள் கோடியக்கரையில் தென்கிழக்கே சுமார் 15 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று திங்கள் கிழமை இரவு 8.00 மணி அளவில் இலங்கை கடற் கொள்ளையர்களால் இரும்பு கம்பி கட்டை மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

இதில் நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த படகின் உரிமையாளர் முருகன் என்பவருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டுள்ளது மற்றும் அவருடன் பயணித்த அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்களுக்கு உள் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள வஞ்சிரம் மீன் வலை, 50,000 மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, டார்ச் லைட், செல்போன், உள்ளிட்ட சுமார் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் பலத்த காயங்களுடன் இன்று அதிகாலை 3 மணி அளவில் கரை திரும்பிய மீனவர்களை செருதூர் மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் தமிழக எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

  • 1

VIDEOS

Recommended