மகளிர் சுய உதவிக்குழு பெண்களும் பொதுமக்களும் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி அருகே உள்ளது வரதப்பனூர் என்ற கிராமம். இந்த கிராமத்திலிருந்து புக்கிரவாரி கிராமம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் செய்து, இரண்டு முறை மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட காவல்துறை, கலால் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதனால் இன்று வரதப்பனூர் கிராமம், அருகில் உள்ள அண்ணா நகர், புக்கிரவாரி புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்களும் ஊர் பொதுமக்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் மதுபான கடை முன்பாக திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தில் வேண்டாம் வேண்டாம் டாஸ்மாக் மதுபான கடை வேண்டாம் என கோஷமிட்ட இவர்கள், அடிக்கடி இங்கு விபத்து மரணங்கள் ஏற்படுவதாகவும், பள்ளி மாணவிகள் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர இடையூறாக உள்ளது எனவும், இந்த டாஸ்மாக் மதுபான கடைகயால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து போகின்றனர் எனவும், டாஸ்மாக் கடை அருகில் சாலை ஓரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை அளித்தனர்.
தொடர் கோஷங்கள் வாயிலாக இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வும் வலியுறுத்தினார்கள். இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு பாதுகாப்பு பணி மேற்கொள்ள வந்த கள்ளக்குறிச்சி கலால் பிரிவு டிஎஸ்பி இரவிச்சந்திரன் மற்றும் சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இங்கிருக்கும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை யினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் அதுவரையில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது, அது வரை மூடி வைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.
டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்களும் ஆண்களும் நீண்ட நேரம் அவ்விடத்தைவிட்டு விலகாமல் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
பின்பு அந்த வழியாக வந்த அரசு பேருந்தை வழிமறித்து சாலை மறியல் செய்து போராட்டக்காரர்கள் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்