சனிக்கிழமைகளில் பத்திரப் பதிவு இனி நடக்குமா ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னை
சனிக்கிழமைகளில் பத்திரப் பதிவு நடக்கும் என்ற அறிவிப்பை கைவிட வேண்டும்' என, சார் - பதிவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், 'அறிவிப்பை கைவிட முடியாது' என, பதிவுத்துறை உயர் அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
சொத்து வாங்குவோர், பணி புரிபவராக இருந்தால், பத்திர தயாரிப்பு, பதிவு பணிக்கு, விடுப்பு எடுத்து வரவேண்டியுள்ளது. பதிவாளர்கள் அலறல் இது போன்றோரின் வசதிக்காக, விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் பத்திரப் பதிவு நடக்கும் என, தமிழக அரசு அறிவித்தது. முதல் கட்டமாக, 100 சார் பதிவாளர் அலுவலகங்களில், இத்திட்டம் அமல் படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு சார் பதிவாளர்கள் சங்கம் அரசுக்கு அனுப்பிய மனு:சார் பதிவாளர் அலுவலகங்களில், காலை முதல் மாலை வரை பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
அதன் பின் பத்திரங்கள் சரி பார்ப்பு, கூடுதல் விபரங்கள் கேட்பு, மதிப்பு ஆய்வு போன்றவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சாதாரண வேலை நாட்களில், பணிகளை முடிக்க இரவு வரை அலுவலகத்தில் இருக்க வேண்டி உள்ளது.
கூடுதல் பணிகளை பெரும்பாலான சார் பதிவாளர்கள், சனிக்கிழமைகளில் மேற் கொள்கின்றனர். இந்த நாளிலும், பத்திரப் பதிவு மேற்கொள்வது என்பது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும். சனிக்கிழமை தோறும் பத்திரப்பதிவு நடக்கும் என்ற திட்டத்தால், பதிவு அலுவலர்களுக்கு பணிச் சுமையும், மன அழுத்தமும் ஏற்படும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
உயரதிகாரிகள் கண்டிப்பு சனிக்கிழமை பத்திரப் பதிவு என்பது, கூடுதல் கட்டணம் செலுத்துவோருக்கு மட்டுமே. அனைத்து பணியாளர்களும் அன்று வரவேண்டி இருக்காது.
சனிக்கிழமை பணிக்கு வருவோருக்கு, வேறு நாட்களில் விடுப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவை, திரும்ப பெற முடியாது என்று பதிவுத்துறை தலைவர், செயலர் ஆகியோர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் பா. கணேசன்