14 வது ஊதிய ஒப்பந்த பேசி முடிக்காததை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன கூட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
3 வருடத்திற்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைபெறுவது வழக்கம். 2017-ம் ஆண்டு 13-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து 14-வது ஊதிய ஒப்பந்தம் 2020-ம் ஆண்டு ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பல போக்குவரத்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
காஞ்சிபுரம் பேருந்து பணிமனை நுழைவாயிலில் அண்ணா தொழிற்சங்கம் பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன், மாநில பொருளாளர் அப்துல் அமீத், காஞ்சிபுரம் அதிமுக கழக செயலாளர் வி.சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் தமிழக அரசையும் போக்குவரத்து கழகத்தையும் கண்டித்து கண்டன வாயிற் கூட்டம் நடைபெற்றது.
அதில் ஊதிய உயர்வு, ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவும், 14 வது ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்காத தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய கமலக்கண்ணன் பேசும்போது, 1972 ல் கலைஞர் கருணாநிதி தான் அரசு துறையாக இருந்த போக்குவரத்து துறையை கழகமாக மாற்றினார்.
அவர் செய்த தப்பை தற்போது உள்ள முதல்வர் முக ஸ்டாலின் செய்யாமல் போக்குவரத்து துறை ஊழியர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என பேசினார்.
மேலும் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பலவிதமான வாக்குறுதிகளை போக்குவரத்து தொழிலாளருக்கு அளித்தது. அதில் ஒன்றைக் கூட செய்யவில்லை .கடைசியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பட்டை நாமம் தான் போட்டது என வருத்தமுடன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டல தலைவர் வெங்கடபதி, செயலாளர் சங்கரன், பொருளாளர் வேணுகோபால், கிருஷ்ணன், தேவேந்திரன் உள்ளிட்ட ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.