தாளவாடி மலைப்பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது.
மகேஷ் பாண்டியன்
UPDATED: May 5, 2023, 2:32:33 PM
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கோவில் மற்றும் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று பேரை தாளவாடி காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தாளவாடி அருகே உள்ள ஒங்கன்புரம் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நேற்றைய முந்தைய தினம் மூன்று திருடர்கள் கோவிலில் உள்ளே புகுந்து கோவில் உண்டியலை உடைத்து திருடி சென்றனர்.
அதனைத் தொடர்ந்து பீம்ராஜநகர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலையும் திருடி சென்றனர். அதே சமயத்தில் ராமாபுரம் பிரிவில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைக்குள் பூட்டை உடைத்து 15000 மதிப்பிலான மதுபானங்களை திருடி சென்றனர்.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தாளவாடி காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது விசாரணையில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவண்ணா 26,பாபு 37,சக்திவேல் 24 ஆகிய 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தெரியவந்தது. இதனை அடுத்து நேற்று இரவு அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சென்றனர்.
அப்போது கோவிலில் திருடப்பட்ட உண்டியல்கள்,பணம் மற்றும் மதுபான பாட்டில்கள் அவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் திருடிய பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் மூன்று பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.