மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாதத்திற்கான அமாவாசை விழா.
மேஷாக்
UPDATED: May 20, 2023, 10:13:35 AM
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந் தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி வைகாசி மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களாலும், எலுமிச்சை மாலைகளாலும் ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இரவு 11 மணியளவில் அங்கிருந்த உற்சவ அம்மன் பம்பை மேளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர்.
பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். ஊஞ்சலில் அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டாரவி தேஜா மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
விழாவை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 600-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.