ஹார்டுவேர்ஸ் கடையின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் மாவட்டம் திம்மையன்பேட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட கருக்குப்பேட்டை பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளவர் சுனில். வடமாநிலத்தை சேர்ந்த சுனில் கடந்த பத்து வருடத்திற்க்கும் மேலாக இங்கு கடை வைத்துள்ளார்.
இவரிடமிருந்து திமுக கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீயின் கணவர் விமல் என்பவர் பஞ்சாயத்துக்கு தேவையான பைப்கள் குழாய்கள், என சுமார் 69 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை கடன் வாங்கிவிட்டு இதுவரை பணத்தைத் திரும்ப கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடையின் உரிமையாளர் சுனில் இந்தப் பணத்தை அவ்வப்போது விமலிடம் கேட்டு வருகிறார்.
இந்நிலையில் சொத்துவரி கேட்டு திமுக கட்சியை சேர்ந்த தன்னுடைய ஆதரவாளர்களை விமல் கடைக்கு அனுப்பி உள்ளார். அதில் 80,000 ரூபாய் சொத்து வரி போட்டுள்ளதை கண்ட சுனில் அதிர்ச்சியுற்றார்.
வாடகை கட்டிடத்தில் கடை வைத்துள்ளேன். இரண்டு வருடம் மட்டும்தான் சொத்து வரி கட்டவில்லை. அதிகபட்சம் 500 ரூபாய்தான் ஆகும். நீங்கள் ஏன் 80,000 ரூபாய்க்கு சொத்து வரி போட்டு உள்ளீர்கள் என கேட்டுள்ளார்.
மேலும் சொத்து வரி எவ்வளவோ அதை நான் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கட்டி கொள்கின்றேன் என வந்திருந்த விமலின் ஆதரவாளர்களிடம் சுனில் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை கேட்டு ஆவேசமடைந்த விமல், சுனிலுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
500 ரூபாய் வரை போட வேண்டிய "தொழில் வரிக்கு" 80 ஆயிரம் ரூபாய் "சொத்து வரி" போட்ட திமுக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜஸ்ரீ மீதும், பணத்தை திருப்பி அளிக்காமல் கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாகப் பேசிய விமல் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்