கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் படியில் பயணம் செய்யும் மாணவர்கள்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பரங்கிப்பேட்டையிலுள்ள பள்ளிக்கூடங்களில் சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
அதேபோன்று, பரங்கிப்பேட்டையை சேர்ந்த பல மாணவ மாணவியர் சி.முட்லூர், பி.முட்லூர், புவனகிரி, கீரப்பாளையம், சிதம்பரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட ஊர்களிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
கல்வி நிறுவனங்களின் வேலை நேரங்களில் மாணவர்கள் சரியான நேரத்திற்கு வந்து செல்ல பரங்கிப்பேட்டைக்கு போதுமான பேருந்துகள் இல்லை. இருக்கின்ற பேருந்துகளும் சரியான நேரத்தில் இயககப்படுவதில்லை.
சில பேருந்துகளில் மாணவ மாணவியர் பயணிக்க மறுப்பு தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தினந்தோறும் மாணவ மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். தேர்வு காலங்களில் இதனுடைய தாக்கம் மிகபெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
அதிகமான நேரங்களில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதால் அவர்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, காலை, மாலை பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி மாணவ மாணவியரின் நலன் காக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்வதுதான் இதற்கான தீர்வாக இருக்க முடியும்.
திங்கள் கிழமை மாலை 4:45 மணியளவில் பரங்கிப்பேட்டை, அகரம் பகுதியில் 17ம் எண் பேருந்தில் எடுக்கப்பட்ட காணொளி படம்
கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி.