• முகப்பு
  • அரசியல்
  • ஜூன் மாத இறுதிக்குள் 6 ஆயிரம் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்.

ஜூன் மாத இறுதிக்குள் 6 ஆயிரம் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்.

ஆர்.தீனதயாளன் 

UPDATED: May 15, 2023, 7:11:59 PM

கபிஸ்தலம் ஊராட்சியில் வெள்ளாளர் தெரு பகுதியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியிலிருந்து ரூபாய் 10.92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ பெரியசாமி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம், ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அய்யாராசு, ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பு மகாலட்சுமி பாலசுப்ரமணியன் வரவேற்று பேசினார்.

அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ பெரியசாமி கூறியதாவது,,

தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகின்றன. அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் 2021- 22 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மற்றும் நடைபெற்று வருகின்ற பணிகளை அனைத்தையும் இன்று காலை முதல் ஆய்வு செய்து வருகின்றேன்.

இந்த பணிகள் அனைத்தையும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

காலை மறுங்குளத்தில் குழந்தை நேயப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்து, அதனை தொடர்ந்து பாபநாசம் ஒன்றியம், சக்கராப்பள்ளி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்து, அதனை தொடர்ந்து தற்பொழுது கபி ஸ்தலத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்துள்ளேன்.

தமிழக முதல்வர் சுமார் 823 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகம் முழுவதும் 6000 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் தரமாக கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த கட்டிடங்கள் அனைத்தும் பணிகளும் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் வருகின்ற ஜூன் மாத இறுதிக்குள் முடிவடைந்து அனைத்து பள்ளி குழந்தைகளும் புதிய வகுப்பறையில் பாடம் கற்பிக்க வேண்டும் என முதல்வர் எண்ணி இந்த திட்டத்தை அறிவித்தார்.

மேலும் இந்த வகுப்பறைகள் கல்லூரிகளுக்கு இணையாக உயரமாகவும் , அகலமாகவும் இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதல்வர் கிராம புற சாலை திட்டத்தின் கீழ் ஓராண்டில் பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க 4000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்குண்டான ஆரம்பப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது, கிராமப்புற சாலை திட்டத்தில் பல்வேறு சாலைகள் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வருகின்ற ஜூன் முதல் வாரம் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு பணிகள் துவங்கப்பட உள்ளன .மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டு வரும் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

திமுக ஆட்சியில் தான் கட்டிடங்கள், சாலைகள் என தொடர்ந்து மக்கள் நலனுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனைத்தும் விடப்பட்டு வருகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார், விழாவில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவகுமார், சுதா, தாசில்தார் பூங்கொடி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், பிரபாகரன், விஜய் பிரசாத், காமராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ் ,ஆனந்த், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்தக்காரர் மதிவாணன் நன்றி கூறினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended