• முகப்பு
  • tamilnadu
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை - ராமதாஸ்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை - ராமதாஸ்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பா. ம. க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கையில்     பழைய ஓய்வூதியத் திட்டம் அரசு பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது, செயல் படுத்த வேண்டும் என கூறினார். தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல் படுத்துவதற்கு அதிக செலவு ஆகும் என்பதால், அதை செயல் படுத்துவது சாத்தியமல்ல என்று நிதியமைச்சர் பழனி வேல்  தியாகராஜன் கூறியிருக்கிறார். அமைச்சரின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. தமிழ் நாடு சட்டப் பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது விளக்கமளித்த அத்துறையின் அமைச்சர் பி. டி. ஆர். பழனி வேல் தியாகராஜன் தனிநபர் ஒருவருக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூபாய் இரண்டு லட்சம் செலவாகிறது. அதே நேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தனிநபர் ஒருவருக்கு ரூபாய் 50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல் படுத்துவது சாத்திய மற்றது என தெரிவித்தார். அத்துடன் இந்த விஷயத்தில் முதலமைச்சரும், அவை முன்னவரும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப் படுவதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதனால், அமைச்சர் கூறியது அவரது சொந்தக் கருத்தா...? அரசின் கருத்தா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்த முடியாது என்பதற்காக அமைச்சர் முன்வைத்துள்ள காரணங்கள் 2 தான். முதலாவது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தமிழ் நாடு அரசின் சார்பிலும், பணியாளர் சார்பிலும் ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப் பட்ட நிதியை பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட வேறு நிதியங்களுக்கு மாற்றுவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன, 2 ஆவது, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மீண்டும் மாற வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசுக்கு அதிக செலவு ஆகும் என்பது தான். ஆனால், இந்த இரு காரணங்களும் ஏற்க முடியாதவையாகும் . ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்ட நிதியை பொது வருங்கால ஜி வைப்பு நிதிக்கு மாற்றுவதில் சட்ட சிக்கல் இருப்பது உண்மை தான். அண்மையில் கூட, அந்த நிதி மாற்றம் குறித்து இராஜஸ்தான் அரசாங்கம் விடுத்த வேண்டு கோளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிராகரித்து விட்டது. ஆனால், தமிழ் நாடு அரசு நினைத்தால் மத்திய அரசிடம் பேசி இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல் படுத்த முடியாது என்று அமைச்சர் கூறுவது கடமை மாறுவதாகும். 2 வதாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால் அரசுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். இன்னும் கேட்டால், நிதிச்சுமை காரணமாகத் தான் 2003 ம் ஆண்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்போதைய ஜெயலலிதா அரசு ரத்து செய்து விட்டு, புதிய  ஓய்வூதியத்தை அறிமுகம் செய்தது. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தால், நிதிச்சுமை அதிகரிக்கும் என்ற உண்மையை நன்றாக அறிந்து தான் 2006, 2011, 2016 ஆகிய   தேர்தல்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல் படுத்துவதற்கான வாக்குறுதியை திமுக அளித்தது. 2021 ம் ஆண்டு தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையின் 84 வது பக்கத்தில் 309 வது வாக்குறுதியாக    பழைய ஓய்வூதியத்திட்டம் இடம் பெற்றுள்ளது. இவ்வாறாக நிதிச்சுமை அதிகரிக்கும் என்பதை நன்றாக அறிந்தே அளிக்கப்பட்ட வாக்குறுதியை, அதே காரணத்திற்காக நிறைவேற்ற மறுப்பது நகை முரண்பாடு ஆகும். இந்திய இராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப் படவில்லை இன்னும் பழைய ஓய்வூதியத் திட்டம் தான் நடை முறையில் உள்ளது. இந்திய நீதித்துறையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல் படுத்தக் கூடாது என 2 வது தேசிய நீதித்துறை ஊதியக் குழு  பரிந்துரைத்துள்ளது. இதற்கு காரணம், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி ஓய்வூதியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்காது என்பது தான். இராணுவத்திலும், நீதித்துறையிலும் நிராகரிக்கப் பட்ட ஓர் ஓய்வூதியத்திட்டத்தை அரசு ஊழியர்கள் மீது மட்டும் தொடர்ந்து திணிப்பது அரசு ஊழியர் நலனுக்கு எவ்வகையிலும் வலு சேர்க்காது. இராஜஸ்தானில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடை முறைக்கு வந்து விட்டது. சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் அத்திட்டம் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நோக்கி பல மாநில அரசுகள் பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் அதற்கு நேர் எதிரான திசையில் பயணிப்பது நியாயமல்ல. பழைய ஓய்வூதியத் திட்டம் செயல் படுத்தப்படும் என்பது தான் திமுகவின் தேர்தல் வாக்குறுதி ஆகும். இல்லாத காரணங்களை எல்லாம் கூறி அதை நிராகரிக்காமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல் படுத்த வேண்டும் என அவர் கூறினார். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended