பரமக்குடி மாணவி பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் மாநில அளவில் சாதனை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Jan 25, 2023, 7:47:29 PM
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செயல்பட்டு வரும் சக்தி சிலம்பம் பயிற்சி பள்ளியில் எண்ணற்ற மாணவர்கள் நமது பாரம்பரிய தமிழ்க் கலையான சிலம்பத்தை கற்று வருகின்றனர்.
சக்தி சிலம்ப பயிற்சி பள்ளியானது கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு பரமக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருடத்திற்கு சுமார் 500 மாணாக்கர்களுக்கும் குறைவில்லாமல் சிலம்ப பயிற்சி பெற்று வருகின்றனர்.
இங்கு சிலம்பம் பயிலும் மாணாக்கர்கள் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசியம் என்ற பல்வேறு நிலைகளிலான போட்டிகளில் பங்குபெற்று பல பரிசுகளை வென்றுள்ளனர்.
அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில், பரமக்குடி அலங்கார மாதா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் முத்துராமன்-வசந்தி தம்பதியரின் மகளாகிய எம்.எம்.நித்ய ஸ்ரீ என்ற மாணவி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் இராமநாதபுர மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, அரியலூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற்று மூன்றாம் இடத்தினை பிடித்து சக்தி சிலம்ப பயிற்சி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மாணவி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்து பயிற்சியளித்து வரும் சிலம்ப ஆசான்களும், மாநில நடுவர்களுமான விஜய் மற்றும் காளீஸ்வரன் ஆகியோரையும் வெற்றி பெற்ற மாணவியையும் இராமநாதபுர மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் தலைவர் மலேசியா பாண்டியன் செயலாளரும், தேசிய நடுவருமான தில்லைக்குமரன், பொருளாளர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் அகம் மகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
சிறப்பு செய்தியாளர்
மு.சண்முகநாதன்