கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கிவைத்தார்.
மாரிமுத்து
UPDATED: May 7, 2023, 1:29:36 PM
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோரம்பள்ளம் உப்பார் ஓடை உபரி நீர் வழிந்தோடி ரெகுலேட்டர் அருகே தூர் வாருதல் சூழவியல் பூங்காவிற்கு மண் வழங்குதல் ரூ 12 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்க விழாவிற்கு கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கி வைத்;தார்.
மாவட்டத்தில் பிரதான குளமாக கோரம்பள்ளம் குளம் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் வடகால் கடைசியில் இக்குளம் அமைந்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை ஒட்டி 1300 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்து காணப்படும் கோரம்பள்ளம் குளம் 1888ம் வருடம் ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது ஆகும்.
இந்த குளத்திற்கு வரும் தண்ணீரை சேமிக்கும் விதமாகவும், உபரி நீரை வெளியேற்றும் விதமாகவும் 24 கண் மதகு கொண்ட பிரமாண்ட கண்மாய் ஒன்றையும் அந்நேரத்தில் ஆங்கிலேயர்கள் கட்டியுள்ளனர்.
பின்னர் காலப்போக்கில் மதகுகள் சேதமடைந்ததால், 1967இல் இரண்டு மதகுகளை ஒன்றாக்கி 24 பெரிய மதகுகளாக மாற்றி புதுப்பிக்கப்பட்டு உள்ளது கோரம்பள்ளம் குளத்து பாசனத்தை நம்பி கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம், அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், வீரநாயக்கன்தட்டு, முள்ளக்காடு, சிறுப்பாடு முதலான கிராம பகுதிகளில் 2262 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண் தொழில் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலும் நெல், வாழைப் பயிர்களே அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.
வெள்ள நேரங்களில் கோரம்பள்ளம் குளத்துக்கு வரும் உபரிநீர், 24 மதகுகள் மூலம் கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஓடையில் நெருக்கமாக வளர்ந்துள்ள சீமை உடை மரங்களாலும் தனியார் ஆக்கிரமிப்புகளாலும் தண்ணீர் விரைவாக செல்ல முடிவதில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஓடையின் கரைகள் உடைப்பெடுத்து, ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடுவது தொடர்கதையாக இருந்தது.
பொதுவாக கோரம்பள்ளம் குளத்து பாசனத்தை பொறுத்தவரை, மழை காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல், வீணாக தண்ணீரை வெளியேற்றுவதும், பயிர்கள் வெள்ளத்தில் சேதமாவதுமே தொடச்சியாக நிகழ்ந்தது.
கோடை காலங்களில் அதற்கு நேர் மாறாக, குளம் தண்ணீரின்றி காய்ந்து விடுவதும், பயிர்கள் கருகி விடுவதுமே தொடர்ந்து நிகழ்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கோரம்பள்ளம் குளத்தை தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் கோரம்பள்ளம் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட படி பணி தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், அவைத்தலைவர் அருணாச்சலம், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.