காஞ்சிபுரம் மாநகராட்சியின் மெத்தன போக்கால் நகரின் மையப் பகுதியில் ஆறாக ஓடும் கழிவுநீரால் சுகாதார கேடு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் மாநகராட்சியின் மெத்தன போக்கால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் சமீப காலமாக அதிகரித்து வருகின்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் 1வது வார்டான பஞ்சுப் பேட்டை பெரிய தெரு பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஆரம்ப சுகாதார மையம், அரசு பள்ளி, துணை மின்சார நிலையம், மத்திய அரசின் வீடற்றோர் தங்கும் விடுதி மற்றும் பிரபல ஓணகாந்தேஸ்வரர் கோவில் ஆகியவை உள்ளது.
பஞ்சுப் பேட்டை பெரிய தெரு மற்றும் சின்ன தெரு போன்ற பகுதிகளில் பல இடங்களில் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதார கேடு விளையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாநகராட்சியில் பல முறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி ஊழியர்கள் எப்போதாவது ஒருமுறை அந்தப் பகுதிக்கு வந்து மேலோட்டமான முறையில் கழிவு நீரை அகற்றி விட்டு சென்று விடுகின்றனர்.
அதிக மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் கழிவுநீரை அகற்ற எந்தவிதமான நிரந்தர நடவடிக்கையும் மாநகராட்சி மேற்கொள்ளாததால் நகரின் மிக முக்கிய நுழைவாயிலான பஞ்சுப் பேட்டை பகுதியில் மிகுந்த துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலைகள் வழியாக ஓடி வீட்டின் வாசல் முன்பு தேங்கி நிற்கின்றது.
வேலைக்கு செல்பவர்களும் சிறுவர் சிறுமிகளும் அந்த கழிவுநீர் வழியாக செல்வதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்ற அவலங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றது.
இதேபோல் ஏகாம்பரநாதர் வடக்குத்தெரு பகுதியிலும் , பஞ்சுப் பேட்டை சின்ன தெரு பகுதியிலும் வணிக தெரு பகுதியிலும் அவ்வப்போது சாலைகளில் ஓடும் கழிவுநீரை நிரந்தரமாக அகற்றி சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.