வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் கண்டிகை கிராமம்,அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ்(27). தனியார் தொழிற்சாலைகளுக்கு வாட்டர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவர் தனக்கு சொந்தமான 2 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றுவிட்டு தனது வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்தார்.
பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதை தொடர்ந்து வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகியிருந்தது.
பின்னர் இரு சக்கர வாகனம் காணாமல் போனது குறித்து சிசிடிவி காட்சியின் ஆதாரத்தோடு மைக்கேல் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்படி போலீஸார் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.