தனியார் மதுபான கடை மீது வெடிகுண்டு வீச்சு,ரவுடிகளின் மாமுல் பிரச்சினையா ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் சாலையில் 4 மாடி கட்டிடத்தில் பெஸ்ட் என்ற தனியார் மதுபான கடை மற்றும் பார் இயங்கி வருகிறது. இரவு சுமார் 10 மணி அளவில் கடையின் முன்பு மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர்கள் திடீரென்று வெடிகுண்டு வீசினர்.
இதில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் மதுபான கடையில் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் மது குடிக்க வந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடினர்.ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா மற்றும் ஆய்வாளர் பாபுஜி தலைமையிலான போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுபான கடையில் சப்ளையராக பணிபுரியும் ஊழியர்களான நாமக்கல்லை சேர்ந்த சசிகுமார் மற்றும் விழுப்புரம் மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் ஆகியோருக்கும் மது குடிக்க வந்தவர்களுக்கும் முன்விரோத தகராறு இருந்துள்ளது.
இதனால் அவர்களை மிரட்டுவதற்காக வெடிகுண்டை வீசி சென்றார்களா? அல்லது தற்போது புதுச்சேரியில் ரவுடிகள் மாமுல் கேட்டு கடைகளை மிரட்டி வருகின்றனர் இதனால் மாமுல் கேட்டு தராததால் தனியார் மதுபான பாரில் வெடிகுண்டு வீசி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உழந்தை கீரப்பாளையம் ரயில்வே கேட் அருகே மர்ம நபர்கள் ரயில்வே தண்டவாளத்தின் மீது வெடிகுண்டு வீசி சென்ற சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது தனியார் மதுபான பாரில் வெடிகுண்டு வீசி சென்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கஞ்சா போதையிலேயே இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, எனவே போலீசார் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, பெரியார்நகர்,, டி ஆர் நகர், அண்ணாநகர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.