20,000 ஆயிரம் கிலோ கட்டுமான கம்பிகள் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக கிடங்கிலிருந்து மாயம் அதிகாரிகளின் அலட்சியமா ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர் ஆகிய 5 ஒன்றியங்களில் 274 ஊராட்சிகள் உள்ளன.
ஊராட்சி ஒன்றியங்கள் தோறும் மத்திய அரசின் பிரதமர் குடியிருப்பு திட்டம் மற்றும் மாநில அரசின் பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் வீடு கட்டி வருகின்றனர்.
வீடு கட்டும் பயனாளிகளுக்கு 104 மூட்டைகள் சிமெண்ட் மற்றும் 320 கிலோ கட்டுமான கம்பி அரசு மானிய விலையில் வழங்கி வருகின்றது.
அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை 325 ரூபாய் 50 கிலோ கம்பியின் விலை 53 ரூபாயும் பயனாளிகள் செலுத்தவேண்டும்.
சிமெண்ட் மற்றும் கட்டுமான கம்பி வழங்குவதற்கு ஒவ்வொரு ஒன்றிய அலுவலகத்திலும் ஓவர்ஸ்சியர் என்று அழைக்கப்படும் கிடங்கு பொறுப்பாளர்கள் இருப்பார்கள்.
இதுபோன்ற நிலையில் இருக்கும் பல அலுவலர்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக இருப்பதால் முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது என துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அந்த வரிசையில் வாலாஜாபாத் ஒன்றியத்தில் முறைகேடு சர்ச்சை கிளம்பியுள்ளது. பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இயங்கி வரும் கிடங்கில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய கட்டுமான கம்பிகளின் இருப்பு விவரத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள 20 ஆயிரம் கிலோ கட்டுமான கம்பிகள் திடீரென மாயமானது கண்டு அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பெண் அலுவலர் ஒருவர் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே பொறுப்பிலிருந்த கிடங்கு பொறுப்பாளரை அழைத்து வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார் விசாரித்துள்ளார்.
அந்தப் பொறுப்பாளர் கம்பி காணாமல் போனதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று நழுவிவிட்டதாகவும் அரசு அலுவலக கட்டிடத்தில் இருந்து 20 ஆயிரம் கிலோ கம்பிகள் மாயமாகி இருப்பது ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள பணியாளர்கள் நான் பொறுப்பில்லை நீ பொறுப்பில்லை என தட்டிகழிப்பதாகவும் ஒரு அரசு கட்டிடத்தில் இருந்து பல ஆயிரம் கிலோ கட்டுமான கம்பிகள் காணாமல் போகிறது என்றால் யார் பொறுப்பு ஏற்பார்கள் எனவும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளின் மெத்தன போக்கால்தான் இப்படிப்பட்ட திருட்டு சம்பவம் நடந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.