14வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாதிரியார்.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 5, 2024, 4:49:35 AM

சின்ன‌ காஞ்சிபுரம் இராஜாஜி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் 14 வயதுடைய சிறுமி. இவர் காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய அம்மா இறந்த நிலையில் அக்கா மற்றும் அப்பாவுடன் வசித்து வருகிறார். 

சிறுமியின் தந்தை ரயில்வே சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச்சில் தோட்ட வேலை செய்து வந்த போது ஒரு வாரம் காலம் சிஎஸ்ஐ சர்ச்சில் சிறுமி தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது சிஎஸ்ஐ சர்ச்சில் பாதிரியாராக இருந்து வரும் தேவஇரக்கம் என்பவர் கடந்த ஓருநாள் இரவு சிறுமி படுத்திருந்த நிலையில் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அப்போது சிறுமி கத்தியபடி வீட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

இதனால் அந்த சிறுமியின் அக்கம் பக்கத்து வீட்டினருக்கு இந்த சிறுமியை பாதிரியார் பாலியியல் துன்புறுத்தியது கசிந்திருக்கிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தகவல் அறிந்து இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட அங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியாவிற்கு இம்மனு வந்த நிலையில் இதுகுறித்து விசாரித்து உண்மை நிலையை அறிந்து காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பாதிரியார் தேவஇரக்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியாரின் செயல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

 

VIDEOS

Recommended