யூடியூபர் சவுக்கு சங்கர் கைது ஏன் ?

ராஜ்குமார்

UPDATED: May 5, 2024, 8:32:33 AM

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகளை பாத்த சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா , இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைமில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் யூடுயூபர் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவு படுத்துதல்,தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று அதிகாலை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவைக்கு போலிசார் மூலம் வேன் மூலம் அழைத்து வந்தனர்.

அப்போது தாராபுரம் அருகே பேக்கரி ஒன்றில் டீ குடித்து விட்டு மீண்டும் கிளம்பிய போது போலீஸ் வேன் மீது கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் சவுக்கு சங்கர் மற்றும் 2 காவல்துறையினர் லேசான காயமடைந்தனர்.

இதனையடுத்து அனைவரும் தாராபுரம் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் வேறு வாகனம் மூலம் அங்கு இருந்து கோவை வந்தனர்.பின்னர் ரகசிய இடத்தில் வைத்து சவுக்கு சங்கரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு சுமார் இரண்டு மணி நேரல் உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. உடல் பரிசோதனைக்கு பின்னர் சவுக்கு சங்கரை கோவை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.

அப்போது கோவை நீதிமன்றம் முன்பு சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனத்தை மறித்து திமுக மகளிரணியினர் செருப்புகள் உடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்களை அவதூறாக பேசும் சவுக்கு சங்கரை சிறைக்குள்ளே வைக்க வேண்டும்,பெண் காவலர்கள் மற்றும் அரசு பணியில் இருப்பவர்களை மிகவும் இழிவாக சவுக்கு சங்கரை வெளியே விடக்கூடாது என கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர்.

சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னால் சவுக்கு சங்கரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சவுக்கு சங்கரை காவல்துறையினர் சிறைக்கு அழைத்து சென்றனர்.

இதனிடையே நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்து செல்வதற்காக வெளியே அழைத்து வந்த போது "ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்க சவுக்கு மீடியா தடையாக இருப்பதால் தான் மேலும் மேலும் பொய் வழக்குகள் போடுகிறார்கள்" என சவுக்கு சங்கர் சத்தமாக கூறினார்.

 

  • 3

VIDEOS

Recommended