• முகப்பு
  • இலங்கை
  • தற்போதைய ஆட்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்நாட்டின் இராணுவ வீரர்களை மிகவும் கீழ்த்தரமான முறையில் காட்டிக் கொடுத்துள்ளது- சஜித்

தற்போதைய ஆட்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்நாட்டின் இராணுவ வீரர்களை மிகவும் கீழ்த்தரமான முறையில் காட்டிக் கொடுத்துள்ளது- சஜித்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Jul 8, 2024, 5:17:18 PM

மிலேனியம் சிட்டி காட்டிக்கொடுத்தல் சம்பவம், மற்றும் 88/89 காலப்பிரிவில் இராணுவ வீரர்களை கொன்றவர்கள் தேர்தல் காலத்தில் இராணுவத்தினரை ஏமாற்றி வருகின்றனர்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

original/img-20240708-wa0079
இராணுவ வீரர்கள் ஆற்றிய பணி ஒருபோதும் ஈடு செய்ய முடியாத பணியாகும். அந்த மகத்தான பங்களிப்பு ஈடு இணையற்ற ஒன்றாகும். ஒரு நாடாக நாம் நெருக்கடிகளை எதிர்கொண்ட போது, ​​நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் சமகாலத்தை பாதுகாக்கவும் 2 குழுக்கள் செயல்பட்டன.

அவர்களில், மகா சங்கத்தினர் தலைமையிலான அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆகிய இரு தரப்பினரும் இதில் பிரதானமாக செயல்பட்டனர். நாட்டைக் காப்பாற்றிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடித்த இராணுவத்தினரை தற்போதைய அரசாங்கம் மறந்துவிட்டு செயற்பட்டுக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

தற்போதைய ஆட்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்நாட்டின் இராணுவ வீரர்களை மிகவும் கீழ்த்தரமான முறையில் காட்டிக் கொடுத்துள்ளது. மிலேனியம் சிட்டி காட்டிக் கொடுப்பு சம்பவம் இதற்கு சிறந்ததொரு உதாரணமாகும். புலனாய்வுத்j துறையைச் சேர்ந்தவர்கள் இதனால் பாரபட்சத்துக்கு ஆளானார்கள். மிக மோசமான பின்னடைவைச் சந்தித்தித்தனர். இராணுவ சமூகத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும். தேர்தலை அருகில் வைத்து இராணு வீரர்களை பலிகடா ஆக்குவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

original/img-20240708-wa0074
இப்போது இவர்கள் முகமூடி அணிந்து கொண்டு மா வீரர்கள் போன்று சமூகத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். இராணுவ வீரர்களில் ஒரு சிறு பகுதியினர் அவர்களுடன் கைகோர்த்தமையையும் நினைத்துப் பார்க்க முடியாதுள்ள என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் திவிதென ரணவிரு மாநாடு நேற்று (7) கோட்டே மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவ்வாறு யார் நின்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி போலியான தரப்புகளோடு நிற்காது. ஐக்கிய மக்கள் சக்தி பொய்யான பாசாங்குத் தனமான நிகழ்ச்சிகளை நடத்தவில்லை. நேர்மையான உண்மையான எண்ணங்கள் மற்றும் இலக்குகளை மையமாகக் கொண்ட பயணத்தின் தெளிவான அடிச்சுவடுகளைக் காட்டவே இவ்வகையான பரந்த உரையாடல்கள் நடத்தப்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 யுத்தத்திற்கு பிறகு இராணுவ வீரர்களின் சேவை முடிந்துவிடவில்லை.

இராணுவ வீரர்களின் சேவை யுத்தத்துடன் முடிந்துவிடாது. பலர் இவர்களது சேவையை யுத்த காலத்துடன் மட்டுப்படுத்த முயன்றனர். யுத்த வெற்றிக்கு பக்க பலம் கொடுத்த இராணுவ வீரர்களுக்கு இன்று அடைக்கலமோ அவர்கள் குறித்த தேடலோ காண்பிப்பதாக இல்லை, மறக்கப்பட்டுள்ளனர். ஏனைய நாடுகளில் உள்ள இராணுவத்துக்கு இருக்கும் கரிசனை எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு கிடைப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

original/img-20240708-wa0063

🟩 இராணுவ வீரர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய வேண்டும்.

யுத்த நடவடிக்கையின் பின்னரான காலப்பகுதியில் யுத்த முன்னெடுப்புகளினால் ஏற்பட்ட உணர்ச்சி அழுத்தங்களினால் யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்படையினர், இராணுவத்தினர் தலைமையிலான பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகள் கடுமையான விளைவுகளை எதிர்கொண்டுள்ளன.

இது குறித்து ஆராய்ந்து ஒரு நாடு என்ற வகையில் இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். சுதந்திர தினம் மற்றும் தேர்தல் காலங்களிலயே நமது நாட்டின் இராணுவத்தினர் நினைவுகூரப்படுகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

🟩 நாட்டைக் கட்டியெழுப்பும் மனிதாபிமானப் பணியில் இணைந்து கொள்ளுங்கள்.

யுத்தத்திற்கு பின்னர் இராணுவ வீரர்களின் கதை முடிந்துவிடாது. அவர்கள் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு தேசிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. வங்குரோத்தான நாட்டில், நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்கும் மனிதாபிமானப் பணியின் ஓர் பங்குதாரர்களாக செயல்பட இராணுவ வீரர்களுக்கு பெரும் பொறுப்புள்ளது. அவ்வாறே மாற்று வழிகளின் மூலம் அவர்களுக்கு வாழ்வாதார ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதும் கொள்கை வகுப்பாளர்களின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

🟩 இராணுவ வீரர்களை பாதுகாப்பதே எமது நோக்கமாகும்.

இராணுவ வீரர்களின் நிகழ்கால நலன்கள் மற்றும் எதிர்கால நலன்களைப் பாதுகாப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். இராணுவ வீரர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்பங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பல கடமைகளை நாம் நிறைவேற்றுவோம். 2019 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக இராணுவ வீரர்களுடன் சமூக உடன்படிக்கை செய்து இராணுவ வீரர்களினது சாசனத்தில் கையெழுத்திட்டோம்.

original/img-20240708-wa0067
ரணவிரு சேவா அதிகார சபையின் ஊடாக இந்த படைவீரர்களுக்கு நலன்புரித்திட்டங்கள் வழங்கப்படுவதில்லை. இது அந்த அதிகாரிகளின் தவறல்ல. மாறாக சட்ட ரீதியான ஏற்பாடுகள் இன்மையே இதற்கு காரணமாகும். உலகின் பல நாடுகளில் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் நமது நாட்டில் அவ்வாறானதொரு திட்டம் வகுக்கப்படவில்லை.

🟩 இராணுவ வீரர்களின் நலனுக்காக தெளிவான கொள்கை தேவை.

நாட்டின் இறையாண்மை, தேசிய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக எமது படைவீரர்கள் தமது இன்னுயிரை தியாகம் செய்து உன்னத சேவையை ஆற்றினார்கள். அதை என்றும் மறக்க முடியாது. படை வீரர்களின் நலனுக்கான தெளிவான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. சகல விடயங்களையும் உள்ளடக்கிய வேலைத்திட்டமொன்றை நாம் வகுத்துள்ளோம். சுகாதாரம், கல்வி, வருமான மூலங்கள், வீட்டுவசதி, நலன், நிதி உதவி போன்ற துறைகளை உள்ளடக்கி ஐக்கிய மக்கள் சக்தியால் அந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இராணுவ கொள்கைகளை இராணுவ செயலகங்கள் மூலம் செயல்படுத்துவோம். அவர் தெரிவித்தார்.

🟩 படை வீரர்களில் இருந்து தொழில்முனைவோரை உருவாக்குவோம்.

ஒரு மில்லியன் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய வேலைத்திட்டமாகும். அதில் படைவீரர்களும் அங்கம் வகிக்கலாம். படை வீரன் கல்வி, ஒழுக்கம், பொறுப்பு, திறமை போன்ற பல குணங்களைக் கொண்ட ஒரு நல்ல குடிமகனாக இருந்து வருகிறார்.

அவ்வாறானதொரு தொழில்முனைவோர் சமூகத்தை உருவாக்குவதற்கு படையினர் பங்களிப்பை நல்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

🟩 படைவீரர்களின் உரிமைகளுக்கான ஜனாதிபதி செயலணி.

வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதில், ஒரு நாடாக, நாம் மிகவும் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டும். இராணுவ வீரர்களின் கொள்கைகளை செயல் வடிவில் முன்னெடுப்பதற்கு விசேட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதியானதும் தாபிப்பேன். 

 

🟩 தனித்துவமான புவியியல் அமைவிடத்தில் இருந்து பயன்பெறுவோம்.

ஒரு நாடாக, நாம் மிக முக்கியமான அமைவிடத்தில் இருக்கிறோம். ஒரு நாடு இத்தகைய நிலையில் இருக்கும்போது, ​​​​அந்த நாடு தனது நிலையில் பெரும் நன்மைகளைப் பெற முடியும். ஆனால் நமது நாட்டில் அது நடந்த பாடில்லை. எமது நாட்டின் அமைவிடத்தில் இருந்து நன்மைகளை நாம் பெறுவதற்கு முன்னர் ஏனைய குழுக்கள் அதனை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டுள்ளன. எனவே அவ்வாறான சந்தர்ப்பங்களை நாம் இனிமேலும் இழக்கக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

original/img-20240708-wa0068

🟩 தேசிய பாதுகாப்பு என்பது இராணுவ பாதுகாப்பு மட்டும் அல்ல.

நாட்டின் தேசியப் பாதுகாப்பு என்பது இராணுவப் பாதுகாப்பு மட்டுமல்ல. அது பல அம்சங்களைக் கொண்டமைந்துள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை கூட தேசிய பாதுகாப்பாகும். சிறந்த ஆரோக்கியமான குடிமக்களை உருவாக்குவது என்பதும் தேசியப் பாதுகாப்பாகும். அறிவார்ந்த, படித்த, திறமையான மக்கள் தலைமுறையாக இருப்பதும் தேசிய பாதுகாப்பாகும். புத்திஜீவிகள் வெளியேற்றம் கூட தேசிய பாதுகாப்பில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது நமது நாடு டீல் போடும் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டதால், அறிவார்ந்த தரப்பினரைக் கொண்டமைந்த ஸ்மார்ட் அரசொன்றின் தேவைப்பாடு எழுந்துள்ளது. நாட்டிற்கு தீங்கு விளைவிக்காத மற்றும் 220 இலட்சம் மக்களுக்கு பாரபட்சம் காட்டாத இணக்கப்பாடுகளும் ஒப்பந்தங்களும் இங்கு எட்டப்பட வேண்டும். 

original/img-20240708-wa0077

🟩 நல்லிணக்கத்தை பேணுவதற்கு படை வீரர்களின் பங்களிப்பு அவசியமாகும்.

ஒரு நாடாக, நாம் ஒரு நல்ல மற்றும் வலுவான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். மூலோபாய ரீதியாக நமது வளங்களை ஆக்கபூர்வமான கொள்கைகளாக வகுத்து, நாடு பெறக்கூடிய நன்மைகளை உச்ச மட்டத்தில் பெற வேண்டும். செலவுகள் அதிகமாக இருந்து வருமானம் குறைவாக இருந்தால், அவற்றை சரியாக நிர்வகிக்க வேண்டும். இதில் அனைவருக்கும் பாரிய பங்கு உள்ளது., இனங்கள், மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை, சமாதானம், நட்புறவு, நல்லிணக்கம் போன்றவற்றின் பங்குதாரர்களாக படை வீரர்கள் மாற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் பெரும் பக்க பலமாக இந்த படைவீரர்கள் திகழ வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended