• முகப்பு
  • இலங்கை
  • யானையுடன் பயணம் செய்த சேவல் இன்று யானையை வழிநடத்துகின்றது- நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான்

யானையுடன் பயணம் செய்த சேவல் இன்று யானையை வழிநடத்துகின்றது- நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 17, 2024, 3:18:47 PM

யானையுடன் பயணம் செய்த சேவல் இன்று யானையை வழிநடத்துகின்றது., மலையக மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும்" என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று (17) வியாழக்கிழமை  தலவாக்கலை ஹொலிரூட் பகுதியில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான்.

விமர்சனங்கள் பல இருந்தாலும் நான்கு வருடகாலமாக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன். அதேபோல் மக்களின் பிரச்சினைகளுக்குக் களத்தில் இறங்கி நான் குரல் கொடுத்திருக்கின்றேன்.எந்த இடத்திலும் நான் ஓடி ஒழியவில்லை. நாடு வங்குரோத்து அடைந்த போது கூட, மலையகத்தைப் பொறுத்த வரையில் இரண்டு சம்பள உயர்வுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். 2020 ஆண்டு சொன்ன 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுத்தோம். 2024 ம் ஆண்டு சம்பள நிர்ணய சபை ஊடாக 1350 சம்பளத்தை பெற்றுக் கொடுத்தோம்.

இது கூட்டு ஒப்பந்தத்தினூடாக அல்ல. சம்பள நிர்ணய சபையில் தொழிலாளர்களுக்கு 1350 சம்பளம் கொடுக்க கூடாது என தற்போதைய ஜனாதிபதியின் தொழிற்சங்கங்கமே எமக்கு எதிராக வாக்களித்தார்கள்.

ஆரம்ப காலம் முதல் நான் சொல்லி வருவது எம்மிடம் இருப்பது 10 ஆயிரம் வீடுகள். ஆனால் 10 ஆயிரம் வீடுகளை வைத்து ஆறு அரசியல்வாதிகள் ஒன்றை லட்சம் பேரை ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள்.நுவரெலியா மாவட்டத்தில் இந்த முறை 30 சுயாதீன கட்சிகள் சுயேட்சையாக களமிறங்கியுள்ளன. எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழ் பிரதி நிதித்துவத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான் வரலாற்றை வைத்துக்கொண்டு உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. எனது பாட்டனாரின் பெயரையோ எனது தந்தையின் பெயரையோ இங்கு பயன்படுத்தவில்லை. நான் உங்களுக்கு செய்த சேவையின் பொருட்டே நாங்கள் உங்களிடம் வருகின்றேன். 

original/whatsapp-image-2024-10-17-at-20
நாங்கள் இந்த அரசாங்கத்தை பொறுப்போற்கும்போது நாட்டில் பொற்காலம் கிடையாது. அது மிகவும் கஸ்டமான காலம். நாடு கொரோனாவில் மூழ்கியிருந்தது அதன்பின்னர் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்தது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் மக்களை பாதுகாக்க வேண்டியிருந்தது.  நுவரெலியா மாவட்டத்தில் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகின்ற பட்டியலை எடுத்து நோக்கினால்  புரொட்டொப் தோட்டப் பகுதியில் முகாமையாளராக இருந்து தொழிலாளர்களை தாக்கியவர் தான் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வேட்பாளர்.  நாட்டை மீட்டெடுத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள். அதேபோல் எம்மையும் தூக்கிப் போடாமல் இருந்தால் சரி.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் மட்டுமே  மலையகத்தில் பல்வேறு அரச நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஆசிரியர் நியமனங்கள்,உதவி ஆசிரியர் நியமனங்கள், கிராம உத்தியோகத்தர்கள்,  பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பல்வேறு நியமனங்களை பெற்றுக் கொடுத்தோம். மலையக மக்களுடைய வாக்குகளைச் சிதறடிக்க முயற்சி செய்கின்றனர். குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு என கூறியவர்கள் களுத்துறை மாவட்டத்தில் தந்தையும் மகனும் போட்டியிடுகின்றனர்.

 எனது குடும்பத்தில் நான் மட்டுமே  போட்டியிடுகின்றேன். எமது வாக்குகளை வீணடிக்காதீர்கள்.  கடந்த நான்கரை வருடகாலமாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். தற்போதைய ஜனாதிபதி பெரும்பான்மை வாக்கில் வெற்றி பெறவில்லை. அவர் 44% வீத வாக்குகளையே பெற்றார்.  ஜனாதிபதியால் 113 பெரும்பான்மையை பாராளுமன்ற தேர்தலில் பெறமுடியாது அதனாலேயே சிறுபான்மை கட்சிகளை உடைக்க முயற்சிக்கின்றார்.

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பையே இல்லாமல் போய்விட்டது. வடக்கு கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவம் கிடைப்பதே பெரும் கேள்வி குறியாகியுள்ளது. எனவே நுவரெலியா மாவட்டத்தில் எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும். எனவே எமது மக்கள் நன்கு சிந்தித்து வாக்களியுங்கள்.நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யானை சின்னத்தில் இலக்கம் 4 இல்  ஜீவன் தொண்டமானாகிய நானும் இலக்கம் 6 இல் பழனி சக்திவேல், இலக்கம் 7 இல் மருதபாண்டி ரமேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றோம். எனவே உங்கள் வாக்குகளை எமக்கு அளித்து நுவரெலியா மாவட்டத்தில் எங்களை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

 

VIDEOS

Recommended