• முகப்பு
  • இலங்கை
  • திட்டமிட்டு ஒடுக்கப்படும் போராட்டங்கள்!! வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கூட்டாக அறிக்கை!

திட்டமிட்டு ஒடுக்கப்படும் போராட்டங்கள்!! வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கூட்டாக அறிக்கை!

வவுனியா

UPDATED: Oct 3, 2024, 9:03:29 AM

கணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தை திட்டமிட்டு ஒடுக்க முயச்சிக்கும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டாக கண்டன அறிக்கை விட்டுள்ளதுடன். வடகிழக்கில் இராணுவத்திடம் சரணடைந்த 1000 ற்கு மேற்பட்ட சிறுவர்கள், 39க்கும் மேற்பட்ட கைக் குழந்தைகளுக்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


 
இது தொடர்பாக வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்…..8 மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் சர்வதேசத்திடம் நீதி கோரிய எமது போராட்டமானது பல இன்னல்களையும் துன்பங்களையும் சுமந்த போராட்டமாக பதினைந்து வருடங்கள் கடந்துள்ளது.

இங்கு மாறி மாறி ஆட்ச்சிக்கு வரும் இலங்கை  அரசிடம் பலவழிகளிலும் நீதி கேட்டு  நின்றோம். நீதி கிடைக்காத  நிலையில்  சர்வதேச நீதியைதேடி 2018 ம் ஆண்டில் இருந்து இன்றுவரை ஜெனிவா மற்றும் ஏனைய நாடுகளுக்கு சென்று வருகின்றோம்,               

எட்டு மாவட்ட வலிந்துகாணாமல்  ஆக்கப்பட் ட   உறவுகளுக்கும் தலைமைகளுக்கும் சிறீலங்கா காவல்துறைவிசாரணை ,புலனாய்வுத்துறை விசாரணை என பல  ஏராளமான மன உளச்சல்கள் ,எண்ணிலடங்காத அச்சுறுத்தல்கள் இவற்றுக்கு மத்தியிலும் நாம் எப்போதும்   எமக்கான  நீதிக்கான போராட்டத்தை  கை விடப்போவதில்லை என உறுதி எடுத்துக்கொள்கின்றோம்.  

இந்நிலையில் சர்வதேச சிறுவர் தினம் அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு சர்வதேச நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கோண்டோம்.வடகிழக்கில் 1000 ற்கு மேற்பட்ட சிறுவர்கள், 39 க்கும் மேற்பட்ட கைக் குழந்தைகள் இராணுவத்திடம் சரண்டைந்தனர். அந்த குழந்தைகளூக்கு என்ன நடந்தது என மீண்டும் மீண்டும் கேட்டு நிற்க்கிறோம்    "இந்த குழந்தைகளை வலிந்து காணாமல் ஆக்கிய விடயத்தில் உலகளாவிய ரீதியில் சிறீலங்கா முதலாம் இடத்தைப் பெற்று நிற்கிறது.

அண்மையில் வவுனியா மாவட்டத்திலும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி திருமதி.எஸ்.ஜெனித்தா அவர்களின் தலைமையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்துக்கு மூன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.

போராட்டம் நடந்து கொண்டிருந்த போது போராட்ட இடத்திற்கு வந்த ஒரு நபர் தான் அநுராவின் ஆள் எனவும் இங்கு போராட்டம் செய்யவேண்டாம் என எச்சரித்தார் அதற்கு தாய்மார் இது ஜனநாயக போராட்டம் நாம் இதை ஏன் நிறுத்த வேண்டும் என்று கேட்டனர் அதற்கு அந்த நபர்   மிக மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி கத்தினார். அவருடைய தொனியில் எமது போராட்டத்தை குழப்புவதற்காக அனுப்ப பட்ட ஒருவராக எமக்கு தெரிந்தது 

இதையெல்லாம் கதைக்க நீர்  யார் என்று கேட்ட போது  , குறித்த நபர் நான் அநுராவுடன் ஒன்றரை  வருடமாக இருக்கின்றேன். அவர் ஜனாதிபதியாக வந்துவிட்டார் அதனால் உங்களை போராட்டம் செய்ய விடமாட்டேன் என்று இறுமாப்புடன் கூறினாா். அதுமட்டுமல்ல உங்களை எல்லாம் கைது செய்யப்போகிறேன் என்று தகாத வார்த்தைகளால் பேசி எமது தாய்மாரின் மனதை மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார்.தை ஏற்படுத்தியவருக்கும் அவரை இயக்குபவருக்கும் நாம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் எமது போராட்டத்தை குழப்ப வரும் எவரானாலும் ஒன்றைப்  புரிந்து கொள்ள வேண்டும் நாம் உறவுகளை உயிருடன்  ஒப்படைத்துவிட்டு அவர்களை தேடிக்கொண்டிருக்கின்றோம். இந்த  போராட்டத்தில்   எம்முடன் இருந்த 280ற்கும் மேற்பட்ட உறவுகளை நாம் இழந்துவிட்டோம். இதற்கு யாருமே பதில் சொல்ல முன்வரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம். ஆகவே   எமதுபோராட்டம் எமக்கு சர்வதேச நீதி கிடைக்கும் வரை தொடரும் என பிரகடனப்படுத்துகின்றோம் என்றனர்.

 குறித்த ஊடக சந்திப்பில் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி எம். உதயச்சந்திரா, செயலாளர் ரி .செல்வராணி உட்பட ஏனைய மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

VIDEOS

Recommended