காட்டு யானைகளின் அச்சுறுத்தலால் மக்கள் அச்சம்

ரஸீன் ரஸ்மின், எம்.ஏ.ஏ. காசிம்

UPDATED: Jun 28, 2024, 6:15:37 PM

புத்தளம் - மஹாகும்புக்கடவல பிரதேச செயலகம் மற்றும் அருகிலுள்ள சந்தையும் கடைகளும் காட்டு யானைகளின் தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக மஹாகும்புக்கடவல பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இன்று (28) அதிகாலை, காட்டு யானையொன்று மஹாகும்புக்கடவல பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து, சில கடைகளை தாக்கியது. அப்போது பிரதேசவாசிகளால் விரட்டியடிக்கப்பட்டதும், மீண்டும் வருகை தந்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

மேலும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்தில் புதிதாக திறக்கப்பட்ட கட்டிடம் ஒன்றும், ஆனமடுவ பிரதேச சபைக்கு சொந்தமான தனியாருக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட கடை ஒன்றும் காட்டு யானை தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, ஆனமடுவ, மஹாகும்புக்கடவல உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் நுழைந்து விவசாய நிலங்கள், பாடசாலை கட்டிடங்கள், வீடுகள், பயன்தரும் மரங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வருவதாக மக்கள் தெரிவித்தனர். 

மேலும், மக்கள் வாழும் கிராமங்களுக்குள் யானைகள் நுழைந்து மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

இவ்வாறு யானைக்கூட்டங்கள் வல்பாலுவ தேக்குமர காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கி கிராமங்களில் அட்டகாசம் புரிந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களில் யானை வெடிகள் வனஜீவராசி திணைக்களம் பொதுமக்களுக்கு வழங்கியிருந்தாலும், யானைகளின் அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமே காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

எனவே, காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த மாற்று வழிகளை ஏற்படுத்திடுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended