• முகப்பு
  • இலங்கை
  • கிழக்கு மாகாணத்தில் பாரிய நிதி மோசடி இன்னும் தீர்வில்லை - சானக்கியன் எம்.பீ

கிழக்கு மாகாணத்தில் பாரிய நிதி மோசடி இன்னும் தீர்வில்லை - சானக்கியன் எம்.பீ

இர்ஷாத் ரஹுமத்துல்லா

UPDATED: Aug 8, 2024, 4:49:49 PM

கிழக்கு மாகாணத்தில் அப்பாவி மக்களின் 170 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ள நிதி நிறுவனத்தின் பணிப்பாளரை நாட்டுக்கு கொண்டு வர முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் நான் இந்த சபையில் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை ஒன்று பதிலளியுங்கள் ,இல்லையேல் வாய்மூல விடைக்கான வினாக்கள் முறைமையை இரத்து செய்யுங்கள் என்று பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது தெரிவித்தேன் .

கேள்வி..! சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில், ஏறாவூர் மற்றும் மருதமுனை ஆகிய பகுதிகளில் 2014.02.05 ஆம் திகதி முதல் ப்ரிவெல்த் க்ளோபல் பிரைவட் லிமிடெட் எனும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்று நடத்திச் செல்லப்பட்டதா,?

அந்நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றிய அஹமட் செரீம் முஹம்மது சிஹாப் மற்றும் பாத்திமா பர்ஸானா மார்கார் ஆகியோர் சுமார் 1400 பேரின் 170 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியை மோசடி செய்துள்ளார்கள் என்பதையும், மேற்குறிப்பிடப்பட்ட பணியாளரும் அவரது குடும்பத்தினரும் இன்று வரை இந்தியாவில் தலைமறைவாகியிருப்பதையும்,இது தொடர்பில் கல்முனை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவாரா,?இவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னவென்பதையும் அமைச்சர் சபைக்கு அறிவிப்பாரா ?

இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சபைக்கு இல்லாததால அரச தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க பதிலளிக்க 3 மாதங்கள் கால அவகாசம் கோரினார்.

இதன்போதே , இந்த கேள்விகளை 2020 செப்டெம்பர் மாதம் முதல் கேட்டுக்கொண்டு வருகின்றேன். நடுத்தர மக்களின் 170 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் எம்மிடம் முறையிட்டு,பாராளுமன்றத்தின் ஊடாக பதிலை எதிர்பார்த்துள்ளார்கள்.

2020 முதல் இன்று வரை மூன்று தடவைகள் இந்த கேள்விகளை தொடர்ந்து சமர்ப்பித்துள்ளேன்.ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை.மக்கள் மத்தியில் செல்லும் போது பாதிக்கப்பட்டவர்கள் எம்மிடம் கேள்வி கேட்கிறார்கள். தொடர்ந்து தாமதப்படுத்துவதால் நாங்களும் இதில் தொடர்புபட்டுள்ளோம் என்று பாதிக்கப்பட்டவர்கள சந்தேகிப்பார்கள்.

இதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் பற்றி கேட்கும் போது அதற்கு பதிலளிக்காமல் காலம் தாழ்த்துவது முறையற்றது. ஆகவே சபாநாயகர் இவ்விடயத்தில் தலையிட வேண்டும் என குறிப்பிட்டேன்.இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ,'நீங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு முறைப்பாடளித்தீர்களா'என்று கேள்வியெழுப்பினார்.

வெளிவிவகாரத்துறை அமைச்சின் ஊடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு இவ்விடயங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதுவரை முன்னேற்றகரமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. பொலிஸார் இவ்விடயத்தை நீதிமன்றத்துக்கு அறிவித்து பிடியாணை உத்தரவை பெற்றுக்கொண்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று இந்திய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். ஆகவே இவ்விடயத்தில் உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுங்கள் என்று கூறினேன்.

இதன்போது எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த ,இது பாரிய நிதி மோசடி. 170 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆகவே இந்த விடயம் குறித்து முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றத்தன்மை தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி இரு தினங்களுக்குள் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றார்.

 

VIDEOS

Recommended