• முகப்பு
  • இலங்கை
  • கடலரிப்பினால் ஆபத்துக்கு உள்ளாகும் கற்பிட்டி - இலந்தையடி பிரதேசம்.

கடலரிப்பினால் ஆபத்துக்கு உள்ளாகும் கற்பிட்டி - இலந்தையடி பிரதேசம்.

ரஸீன் ரஸ்மின், எம்.ஏ.ஏ.காசிம்

UPDATED: Jun 4, 2024, 7:18:34 PM

கற்பிட்டி - நுரைச்சோலை கரையோரப்பகுதியின் கொய்யாவாடி, இலந்தையடி மற்றும் ஆலங்குடா உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்ச்சியாக கடல் அரிப்புக்குள்ளாகி வருகின்றன. 

இந்தக் கரையோரப்பகுதியில் சுமார் 200 இற்கும் அதிகமான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றதுடன் கடலரிப்பினால் இவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 

தற்போது மீனவ மக்களின் படகுகள் கூட கரையோரங்களில் வைக்கமுடியாத நிலைமை காணப்படுகின்றன. 


மேலும், சுனாமி ஏற்பட்ட போது பாதுகாப்பிற்காக கரையோரப்பகுதிகளில் சவர்க்கு மரங்கள் நாட்டப்பட்டபோதிலும் தற்போது கடலரிப்பினால் அந்த மரங்கள் சரிந்து வீழ்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றன.

குறித்த பகுதியில் கண்ணுக்கு குளிர்ச்சியாக நூற்றுக்கணக்கான சவுக்கு மரங்கள் நிரம்பிக் காணப்பட்ட போது அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் , பொதுமக்களும் வருகை தந்ததாகவும், தற்போது புத்தளத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூட தங்களது பொழுதைக் கழிப்பதற்காக அந்த இடத்திற்கு வருகை தருவதில்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் கடலரிப்பை தடுப்பதற்காக பாரிய கற்கல் போடப்பட்டுள்ள போதிலும் கடலைப்பின் தீவிரம் இதுவரையிலும் குறையவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.


இதுவரை சுமார் 400 மீற்றர் வரை கடல் அரிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், கடலரிப்பினால் தற்போது தமது குடியிருப்புகளும், மீன்வாடிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். 

அத்தோடு, இலந்தையடி கடற்பிரதேசத்தை அண்மித்த பகுதியில் கத்தோலிக்க சவக்காலை ஒன்றும் உள்ளதுடன், இவ்வாறு தொடர்ந்தும் கடலரிப்பு ஏற்படுமானால் அந்த சவக்காலையும் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.



எனவே, சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரக்கூடிய ஓர் இடமாக புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேசம் காணப்படுகின்ற போதிலும், இவ்வாறு கடலரிப்பினால் அந்தப் பகுதியின் அழகுகளும் மழுங்கிய நிலையில் காணப்படுவதாகவும் இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் முறையான பாதுகாப்பு நடவரிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

VIDEOS

Recommended