• முகப்பு
  • இலங்கை
  • மானிட ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தின் மேன்மையையும் ஹஜ்ஜூ பெருநாள் பறைசாற்றுகிறது - செந்தில் தொண்டமான்

மானிட ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தின் மேன்மையையும் ஹஜ்ஜூ பெருநாள் பறைசாற்றுகிறது - செந்தில் தொண்டமான்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 17, 2024, 2:17:20 AM

ஹஜ் கடமையில் ஈடுபட்டிருக்கும் யாத்திரியர்களுக்கும் உலக இஸ்லாமிய சமூகத்திற்கும் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் தனது இதயம் கனிந்த ஹஜ்ஜூ பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் , மனிதன் தொன்மைக் காலம் தொட்டே சமய நிகழ்வுகளில் ஒன்றுசேர்ந்து ஈடுபடுவதை வரலாறுகள் குறிப்பிடுகின்றன.

பல யுகங்கள் கடந்த பின்னரும் கூட மனிதர்கள் தாம் பின்பற்றும் சமயத்தின் தனித்துவமான வணக்க வழிபாட்டு முறைகளைப் பாதுகாக்க ஒற்றுமையோடு தம்மை அர்ப்பணித்துள்ளனர்.

ஹஜ் யாத்திரையின் ஊடாக உலகெங்கும் உள்ள இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே நோக்கத்திற்காக ஒரே இடத்தில் ஒன்றுசேர்ந்து, மானிட ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தின் மேன்மையையும் உலகிற்கு பறைசாற்றுகின்றனர்.

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தெய்வீகப் பிணைப்பை சிறப்பாக எடுத்துக்காட்டும் இந்த ஹஜ் கடமையானது, மனிதர்களுக்கிடையிலான அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உலகின் நாற்திசைகளிலும் இருந்து வருகின்ற அனைத்து மக்களும் ஒரே விதமாக இறைவனை வணங்கும் உயர்ந்த வணக்கமாகும்.

பிரிவினை மட்டுமே முதன்மைபடுத்தப்பட்டுள்ள இன்றைய உலகில் பரஸ்பர பிணைப்பையும் தலைமைத்துவத்துக்கும் கட்டுப்படும் போதனையையும் சமூகமயப்படுத்தும் ஹஜ், உலகுக்கு வழங்கும் உன்னத செய்தி சமத்துவத்தின் மூலம் கட்டியெழுப்பப்படும் உயர்ந்த சமூக நீதியாகும்.

புனித மக்கா நகரை மையமாகக் கொண்டு ஹஜ் வணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் யாத்திரிகர்களுக்கும் உலக வாழ் இஸ்லாம் சமூகத்துக்கும் எனது இதயபூர்வமான ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended