• முகப்பு
  • இலங்கை
  • மீண்டும் கிழக்கில் துப்பாக்கிக் காலாச்சாரம்..! உயிருக்கு உத்தரவாதமில்லை

மீண்டும் கிழக்கில் துப்பாக்கிக் காலாச்சாரம்..! உயிருக்கு உத்தரவாதமில்லை

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 21, 2024, 8:55:15 AM

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முக்கியமான தொரு விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் மேற்கண்டவாறு கூறினார்.

 பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து பேசும் போது இந்த விடயத்திலே புதிய சட்டமூலம் ஒன்று கொண்டு வரும் போது எங்களுடைய வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விசேடமாக, விசேட வேலைத்திட்டம் ஒன்று யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் பூர்த்தியாகியும் இதுவரை காணக்கூடியதாக இல்லை.

அதாவது பெண்களை, கணவனை இழந்த இளம் பெண்களுக்கு புதியதொரு வேலைத்திட்டம் ஒன்றை கொண்டு வந்து அதன் ஊடாக வடக்கு கிழக்கில் இருக்கும் வாழ்வாதாரத்தை வாழ்வை கட்டியெழுப்பக் கூடிய எந்தவொரு வேலைத்திட்டத்தையும் இதுவரைக்கும் இந்த பெண்கள் காண முடியாத சூழலே காணப்படுகிறது.

எங்களுடைய காணாமலாக்கப்பட்ட அந்த உறவுகள், பெண்கள் பல வருட காலங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையிலே இவ்வாறான இந்த சட்ட மூலங்களை கொண்டு வருவதை போல, வடக்கு கிழக்கிலே இருக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான விசேட திட்டமொன்றை வருங்காலங்களில் வரும் அரசாங்கங்களாவது முன்னெடுக்க வேண்டும் என்ற விடயத்தை முதலாவது கூறிக் கொள்கிறேன்.

அத்துடன், முக்கியமாக கடந்த வாரத்தில் மட்டக்களப்பில் நடந்த அதுவும் ஒரு பெண் ஒருவரை குறி வைத்து இடம்பெற்ற சம்பவம் பற்றி இந்த சபையிலே சில விடயங்களை கூறலாம் என்று நினைக்கிறேன். 14.06.2024 அதாவது ஜுன் 14ஆம் திகதி மட்டக்களப்பை சேர்ந்த ஒரு பெண், சித்திக் ஷிபானி என்ற பெண் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பாக ஐந்து தினங்களுக்கு முன்னர் சக்தி டிவி -இலும் செய்தி வெளியாகியிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் இந்த இராணுவ புலனாய்வுத் துறையுடன் தொடர்புடைய ட்ரிப்பளி ப்ளடுன் குழுவினர் சம்பந்தப்பட்ட விடயங்கள், ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கும் இந்த குழுவினருக்கும் என்னென்ன தொடர்புகள் இருந்தன? என்பதை பல நாட்களாக இந்த சபையில் நான் கூறி வருகிறேன். கடந்த நான்காம் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற உரையில் இதை பற்றி மிக விளக்கமாக குறிப்பிட்டு இருந்தேன்.

2008ஆம் ஆண்டு எவ்வாறு சாந்தன் என்ற தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுடைய ஆரையம்பதி பொறுப்பாளர் எவ்வாறு சுடப்பட்டார்? அந்த சம்பவத்தின் பின்னணியில் காணப்பட்ட பொலிஸ் ஃபாயிஸ், மொஹமட் சயீத், குகன் என்ற நபர், அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரில் இஸ்லாமியராக மாறி இருக்கிறார் என்று இந்த விளக்கங்களை மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.

 ஆனால் இந்த விடயங்கள் தொடர்பாக இதுவரை எவ்வித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் இன்று மீண்டும் காத்தான்குடியில் துப்பாக்கியை வைத்து ஒரு சம்பவம் இடம்பெற்று இருக்கிறது. இந்த விடயத்தை பற்றிய முக்கியமாக சிங்களத்தில் கூறினால் தான் இந்த நாட்டில் இராணுவ புலனாய்வுத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த அரசாங்கம் எவ்வாறு பாதுகாப்பு வழங்குகிறது என்பதை சிங்கள சமூகம் அறியும். அதற்காக இந்த விடயத்தை சிங்களத்தில் கூற விரும்புகிறேன்.

கடந்த 14ஆம் திகதி சித்திக் ஷிஃபானி என்ற பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொலை முயற்சி ஒன்று இடம்பெற்று இருக்கிறது. இந்த பெண் மீது காத்தான்குடியில் வைத்து காலை 10.30 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் அந்த துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பியுள்ளார்.

 ஆனால் பின்னர் அவர் துப்பாக்கியினால் அவரது தலையில் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் ட்ரிப்பளி ப்ளடுன் என்ற குழுவின் செயற்பாடுகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் அந்த குழுவினருக்கான தொடர்பு, 2004ஆம் ஆண்டு முதல் லசந்த விக்ரமதுங்கள், பிரகீத் எக்னெலிகொட, ஜோசப் பரராஜசிங்கம் கொலைகளுடன் இந்த ட்ரிப்பளி ப்ளடுன் குழுவினர் தொடர்புபட்டு இருந்தமை குறித்து தொடர்ச்சியாக இந்த பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளேன்.

ஆனால் இதுவரை இது குறித்து எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெற்ற விவாதத்தின் போது இந்த குழுவினர் குறித்து மிகத் தெளிவாக இந்த பாராளுமன்றில் குறிப்பிட்டு இருந்தேன்.


2008ஆம் ஆண்டு சாந்தன் என்ற தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுடைய ஆரையம்பதி பொறுப்பாளர் மீது 22 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த சம்பவத்தின் பின்னணியில் காணப்பட்ட பொலிஸ் ஃபாயிஸ், மொஹமட் சயீத், குகன் என்ற நபர், அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரில் இஸ்லாமியராக மாறி இருக்கிறார் என்று அந்த விளக்கங்களையும் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.

ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி இதை நான் கூறியிருந்தேன். அதன்போது ஹுசைன் அல்லது குகன் குறிப்பிடப்படும் நபரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் குறிப்பிட்டு கூறியிருந்தேன். எனது அந்த பாராளுமன்ற உரையின் பின்னர் அந்த ஹுசைன் என்ற நபர் மனித உரிமைகள் ஆணைக்குழு, ஐக்கிய நாடுகள் போன்ற இன்னும் பல இடங்களுக்கு சென்று 2008 சாந்தன் துப்பாக்கிச் கூட்டிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சித்திக் ஷிஃபானி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேகத்தின் பேரில் அன்று நான் குறிப்பிட்ட நபரே கைது செய்யப்பட்டுள்ளார். சித்திக் ஷிஃபானி மீது துப்பாக்கிச்சூடு நடத்த சென்ற மொஹமட் சயீத் என்பவரே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

 அவரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் தர முடியும். அவர் பொலிஸ் காவலில் உள்ளார். அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. ஏனெனில் கைது செய்ய முற்படும் போது அவரது தலையில் தாக்கப்பட்டு உள்ளதால் அவரிடம் வாக்குமூலம் பெற முடியாது உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நபர் காத்தான்குடியின் முன்னாள் பிரதேச செயலாளர் ஃபலீல் என்பவரது கொலை வழக்கிலும் கடந்த காலங்களில் தொடர்புபட்டவராக காணப்படுகிறார். இவர்கள் இந்த குழுவினர் பல ஆண்டுகளாக இராணுவ புலனாய்வு துறையுடன் இணைந்த செயற்படும் குழுவாகும். ஏன் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பதும், என்ன காரணம் என்பதும் எமக்கு தெரியாது. ஆனால் காலை 10.30 மணிக்கு இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் உள்ளன.

நாங்கள் கூறும் இந்த விடயங்கள் தொடர்பாக இந்த அரசாங்கம் இன்னும் எத்தனை காலங்களுக்கு தான் விசாரணைகளை மேற்கொள்ளாது இருக்கும்? இன்னும் எவ்வளவு காலங்களுக்கு தான் மக்களை ஆபத்தில் தள்ளுவீர்கள்? இந்த இராணுவ புலனாய்வு துறையுடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பதற்காக இந்த குழுவினர் இன்னும் எத்தனை கொலைகளை செய்யும் வரை பார்த்துக் கொண்டு இருக்க போகிறீர்கள்?

இது நம் அனைவரதும், இந்த பாராளுமன்றத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களது உயிருக்கும் அச்சுறுத்தலான விடயமாகும். இவ்வாறு பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச் செல்ல முடியுமாயின் என்ன அர்த்தம்?

இதற்கு மேலதிகமாக எனது ஏப்ரல் 25 பாராளுமன்ற உரையை தொடர்ந்து இந்த குகன் அல்லது ஹுசைன் அவரது உண்மை பெயர் எனக்கு தெரியாது என்ற நபர், ஐக்கிய நாடுகள், வேறு எங்கு என்று தெரியாது பல இடங்களில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். எங்களிடம் குறிப்பு உள்ளது.

அதாவது 2008 துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து, துப்பாக்கிச்சூட்டின் பின்னர் பொலிஸ் பாயிஸ், மொஹமட் சயீத், குகன் அல்லது ஹுசைன் ஆகியோர் அந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விதம், எங்கிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?, எங்கிருந்து திட்டமிடப்பட்டது? என்பது இதுவரை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னால் தெரிவிப்பதற்கு தயாராக இருக்கின்றனர்.

அவர்கள் பேசிய காணொளி எம்மிடம் உள்ளது. சாந்தன் என்ற நபர் 'அப்பாச்சி' மோட்டார் சைக்கிளில் வந்தமை, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விதம், அவரிடமிருந்த பணத்தை எடுத்த விதம், அதேபோன்று அவரது இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்த விதத்தையும் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறாயின் சாந்தன் என்ற நபரின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, இதற்கு முன்னர் இதே குழுவினரே தான் 2004 – 2005 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலும் தொடர்புபட்டுள்ளனர்.

இந்த ட்ரிப்பளி பிளடுன் என்ற குழுவில் உள்ளவர்கள் தான் இந்த கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். அந்த துப்பாக்கியும் தற்போது பயன்படுத்தப்படும் துப்பாக்கியும் ஒன்றா என்றும் தெரியாது. இவ்வாறான ஒரு பாரிய பிரச்சினை இந்த நாட்டில் உள்ளது.

நாம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கோருகிறோம். ஆனால் நாம் இவ்வளவு தரவுகளை முன்வைத்தும் எதுவும் நடந்ததாக இல்லை. சிறுவரொருக்கு அரைந்த குற்றச்சாட்டில் குகுல் சமிந்த என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை வழங்குகின்றனர்.

பிள்ளைகளுக்கு அவ்வாறு செய்தமைக்கு தண்டனை வழங்குவது தான் சரியானாக இருக்கும். ஆனால் குகுல் சமிந்த குறித்து பேசியதற்கு அது குறித்து விசாரணை மேற்கொண்டு தண்டனை வழங்க கூடிய நாட்டில், இவ்வளவு பாரிய பிரச்சினை குறித்து நாம் பாராளுமன்றில் இவ்வளவு தூரம் தெளிவுபடுத்தியும் ஏன் இவை குறித்து விசாரணை நடத்தப்படவில்லை?

மொஹமட் சயீத் பொலிஸ் காவலில் உள்ளார். அவர் தாக்கப்பட்டு உள்ளதால் அவரிடம் விசாரணை நடத்த முடியாதுள்ளதாக குறிப்பிடுகின்றனர். அவ்வாறாயின் அவர் யாரது தேவைக்காக துப்பாக்கிச்சூடு நடத்த சென்றார்? அவர் விசாரணைகளில் வாய் திறக்காது இருப்பதற்காகவா தாக்கப்பட்டார்? இது பாரிய பிரச்சினையாகும்.

மேலும், என்னிடம் ஒரு கடிதம் உள்ளது. எனக்கு இந்த கடிதத்தை மொஹமட் தம்பி ஹுவைஸ் என்பவரே வழங்கியுள்ளார். காத்தான்குடியை சேர்ந்த மொஹமட் தம்பி ஹுவைஸ் இந்த கடிதத்தை எனக்கு எழுதியுள்ளார். மொஹமட் தம்பி ஹுவைஸ் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலைக்கு சென்று இந்த புலனாய்வுத்துறை உடன் இணைந்து இந்த கொலைகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக பல வாக்குமூலங்களை வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தரவுகள் வழங்கியமையால் அவருக்கு பாதுகாப்பு வலையமைப்பு ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டு இருந்திருக்கிறது.

ஆனால் இன்று அதனையும் இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது பாராளுமன்ற உறுப்பினர்களது உயிருக்கும் ஒரு அச்சுறுத்தலாகும். இவைகள் இவ்வாறாக தொடர்ந்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாமல் இருக்குமாயின் அது பாரிய அச்சுறுத்தல்களாக மாறும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

 

 

VIDEOS

Recommended