அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை விவரம்

அஜித்குமார்

UPDATED: May 1, 2024, 12:25:37 PM

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவில், அஷ்டலிங்க கோவில்கள், திருநேர் அண்ணாமலையார் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

மாதம்தோறும் அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப் பாதையில் அஷ்டலிங்க சந்நிதிகளில் உள்ள உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கை பணம் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி, செவ்வாய்க்கிழமைகாலை முதல் இரவு வரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஜீவானந்தம், இணை ஆணையா் சி.ஜோதி ஆகியோா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கோயில் உண்டியலில் 2 கோடியே 23 லட்சத்து 71 ஆயிரத்து 962 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

மேலும், 365 கிராம் தங்கம், 2 கிலோ 838 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது.

பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு சித்திரை மாத பெளா்ணமியையொட்டி சுமாா் 30 லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனா். எனவே, உண்டியல் காணிக்கை அதிகமாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.

 

VIDEOS

Recommended