• முகப்பு
  • அரசியல்
  • கொன்றொழிக்கப்பட்ட தமிழினத்தின் தியாகங்களில் ஏறி நின்று சர்வதேச சக்திகள் செயலாற்ற முனைவதை நாம் நிராகரிக்கின்றோம்

கொன்றொழிக்கப்பட்ட தமிழினத்தின் தியாகங்களில் ஏறி நின்று சர்வதேச சக்திகள் செயலாற்ற முனைவதை நாம் நிராகரிக்கின்றோம்

வவுனியா

UPDATED: May 18, 2024, 6:14:15 AM

கொன்றொழிக்கப்பட்ட தமிழினத்தின் தியாகங்களில் ஏறி நின்று சர்வதேச சக்திகள் செயலாற்ற முனைவதை நாம் நிராகரிக்கின்றோம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

இக்கட்சியின் ஊடக செயலாளர் க. துளசி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை தீவின் இரண்டு தேசிய இனங்களுக்கிடையில் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி உரிமை, அரசியல் அதிகார பங்கீடுகள் தொடர்பில் பெரும்பான்மை சிங்கள இனம் ஆட்சி அதிகாரங்களை கையகப்படுத்தி தமிழ் தேசிய இனத்தின் இருப்பிற்கும் உயிர்வாழ்தலுக்கான உரிமைக்கும் தனது இராணுவ மேலாண்மையை பயன்படுத்தி கேடுவிளைவித்திருந்தது. 

 அதன் விளைவாக தமிழர் தரப்பு அகிம்சாவழி போராட்டமும் தொடர்சியாக ஓர் ஆயுதவழி போராட்டமும் தமிழினத்தின் மீது வலிந்து திணிக்கப்பட்டது.


போரின் உச்சமாக கடலையும் பெரும் வெளியையும் சாட்சியாக வைத்து தரை கடல் ஆகாயமார்க்கங்களாக தனது இராணுவ வல்லாண்மையினை பயன்படுத்தி நாட்டின் பூர்வீக குடிகளான தமிழர்களை இனவழிப்பு செய்து தனது கோர முகத்தினை உலகிற்கு காட்டி நின்றது.

புதைகுழிகள் இன்றி புதைக்க எவருமின்றிமாண்டுபோன ஒரு தேசிய இனத்தின் துயரத்தை அரசியல் விடுதலையாக பிரசவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டென்பதை நாம் திடமாக நம்புகிறோம்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வின் அடிப்படை தத்துவத்தைகூட புரிந்து கொள்ளாத ஒரு வரட்டு மனோபாவத்தில் இன்றும் பயணிக்கிறது சிங்கள அரசு. தமது தேவைகள் மீதான கரிசனையில் கடந்த ஏழு தசாப்தகாலம் எப்படி பயணித்ததோ அதற்கு சற்றும் அதன் போக்கிலிருந்து சளைக்காமல் தீவிரமாக பயணிப்பதை தெற்கு அரசியலின் சமகால நிகழ்வுகள் படம் பிடித்து காட்டுகின்றது.


இப்படியான மிகவும் சலனத்துக்குரிய இடர்பாடுகள் மிகுந்த திருப்பு முனையில் பயணிக்கும் தமிழ் அரசியல் வகிபங்காளர்கள் ஒன்றிணைந்து ஏகோபித்த ஓர் அரசியல் செயற்பாடொன்றின் மூலமாகவே சமகால சவால்களுக்கு முகம்கொடுக்க முடியும்.

2009 பின்னர் தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்குள்தாமே சிதைவுற்று தமிழினத்தின் தேசிய பலத்திற்கு ஊறுவிளைவித்தமையினை பேரவலத்தில் மாண்டுபோன ஆத்மாக்களும் நெஞ்சுரத்தோடு வீழ்ந்துபோன ஆத்மாக்களும் ஒருபோதும் மன்னிக்காது.

பரஸ்பரம் கடந்தகால தவறுகளை புரிந்துகொண்டு வெற்றி தோல்விகளில் இருந்து இரு தரப்பினரும் பாடங்களை கற்றுக்கொண்டு எதிர்கால பாதையினை வடிவமைக்க வேண்டியதேவை இரு தரப்பினருக்கும் உண்டென்பதே காலத்தேவையாகின்றது.

நாம் அகிம்சை ரீதியாகவும் ஆயுதமேந்தி போரிட்டதும் எமது மக்களுக்காகவே தவிர பிராந்திய சர்வதேச நலன்களுக்காக அல்ல 

மீளவும் கொன்றொழிக்கப்பட்ட தமிழினத்தின் தியாகங்களில் ஏறி நின்று சர்வதேச சக்திகள் செயலாற்ற முனைவதை நாம் நிராகரிக்கின்றோம்.

அன்பான மக்களே

ஆயுத போராட்டத்தைப்போல இந்த அரசியல் பாதையும் காலத்தால் எங்களுக்கு நிர்ப்பத்தித்து திணிக்கப்பட்டதே.

2009 பின்னரான எமது மக்களின் அரசியல் சமூக பொருளாதார விடிவுக்காக எந்தவொரு தத்துரூபமான வடிவங்களையும் நாம் முயற்சிக்காமையானது எமது துரதிஸ்ரமே. 

இனி வருகின்ற காலங்களில் போராளிகளது அரசியல் வெற்றியானது மட்டுமே தமிழினத்திற்கான புதிய செல்நெறிபோக்கினை

 உருவாக்கும் இதனை செய்ய தவறுவோமாக இருந்தால் எதிர்காலத்திலும் தமிழர்களுக்கு பிரச்சினைகள் இருக்கும் ஆனால் எதிர்கொள்ள தாயகத்தில் தமிழர்கள் இருக்க மாட்டார்கள்.

 

VIDEOS

Recommended