• முகப்பு
  • அரசியல்
  • நாங்கள் சவால்களை எதிர்கொள்ளும் அணி. இந்த வெற்றி எங்களுக்கு ஒரு பிரச்சினையல்ல.

நாங்கள் சவால்களை எதிர்கொள்ளும் அணி. இந்த வெற்றி எங்களுக்கு ஒரு பிரச்சினையல்ல.

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Sep 3, 2024, 12:11:57 AM

போராட்டத்தின் மூலம் வன்முறையை உருவாக்கிய ஒரு தலைவரால், இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியாது  என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அப்படியொரு தலைவரை நியமித்தால், இந்த நாடு இன்று பங்களாதேஷின் தலை விதிக்கு அப்பாற்பட்ட நிலைமைக்குத் தள்ளப்படும்" எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

original/img-20240901-wa0070
கம்பஹா மாவட்டத்தின் தொம்பே தேர்தல் தொகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் ‘இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

 இந்த மக்கள் பேரணி, கிரிந்திவெல பஸ் நிலையத்துக்கு அருகில் நடைபெற்றது.

 அங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறுகையில்,

 எனது 40 வருட அரசியல் வாழ்க்கையில், தொம்பே மக்கள் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

கம்பஹா மாவட்டத்தில் நாட்டை நேசிக்கும் மற்றும் சவால்களை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் உள்ளனர். அன்று மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட பின்னர், கம்பஹா மாவட்டத்தில் நாங்கள் மொட்டைக் கட்டியெழுப்பி, அவரை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு உழைத்தோம். அதற்கு கம்பஹா மாவட்ட மக்கள் எனக்கு பெரும் ஆதரவை வழங்கினர்.

அன்று பொருளாதார நெருக்கடியில் அனைவரும் ஓடியபோது, இந்த நாட்டை மீட்டெடுக்கலாம் என நினைத்து நாட்டைக் காப்பாற்றி சவால்களை ஏற்று, நாட்டை வழி நடத்திய தலைவனுக்காக உழைத்த அந்தத் தலைவரை மீண்டும் இந்த நாட்டில் ஆட்சிக்குக் கொண்டு வருவோம் என்றோம். நாங்கள் சவால்களை எதிர்கொள்ளும் அணி. இந்த வெற்றி எங்களுக்கு ஒரு பிரச்சினையல்ல.

   இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 39 வேட்பாளர்களில், ஏழு முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர். அவர்கள் யாரும் அந்த சவாலை ஏற்கவில்லை. அந்த சவாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே ஏற்றுக்கொண்டார். இதுபோன்ற பல பணிகளை அவர் மேற்கொண்டார்.

   ரணசிங்க பிரேமதாச அவர்கள் காலமானபோது, நாட்டு மக்களுக்காக பிரதமர் பதவியை ஏற்றார். 1999 இல் இந்த நாடு எதிர்மறையான பொருளாதாரத்துக்கு சென்ற போது, அவர் இந்த நாட்டைப் பொருளாதார ரீதியாகப் பலப்படுத்த பாடுபட்டார். 

 மேலும், 2022 இல் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த ஒரு சகாப்தத்தில், எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக வரிசைகள் இருந்தன. எங்களிடம் தேவையான மருந்து இருக்கவில்லை. அப்போது, இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று கூறி, பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

 இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும், அவர் இந்நாட்டு மக்களுக்கு நியாயத்தை வழங்கினார். ரணில் விக்கிரமசிங்க சவால்களை வெற்றி கொள்ளும் ஒரு தலைவராக தம்மை நிரூபித்துக்கொண்டு, இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

 மற்ற இரண்டு வேட்பாளர்களைப் பாருங்கள். அப்போது எமது அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக அநுர குமார திஸாநாயக்க இருந்தார்.

   மிகவும் தோல்வியடைந்த அமைச்சராக வரலாற்றில் இடம்பிடித்தார். ஊழல் பற்றிப் பேசும் அநுர குமார திஸாநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் டொலர்கள் அவரது சிறிய தாயின் பெட்டகத்தில் இருந்தன. அவர் அதை ஏற்றுக்கொண்டார்.

   ஊடகங்களுக்கு வந்த அவர், தேர்தல் பிரசாரத்துக்காக சிறிய தாயின் பெட்டகத்தில் டொலர் நோட்டுகள் கிடைத்ததாகக் கூறினார். தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால், அந்தப் பணம், தங்கள் கட்சிக்கணக்கில் இருக்க வேண்டும். ஆனால், அது தனிப்பட்ட முறையில் அவரது சிறிய தாயின் கணக்கில் இருந்தது.

   அப்படிப்பட்டவர்கள் இன்று ஊழல் பற்றிப் பேசுகிறார்கள். 88/89 காலத்தில் வீடுகளில் தங்கப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அடையாள அட்டைகள் எடுக்கப்பட்டன. அவர்கள் இன்று நல்ல குணாதிசயங்களாக மாறி, இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது.

   2022 "அரகல" யின்போது வீடுகளுக்குச் சென்று பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றது, அநுரகுமாரவின் 'ஹெல்மெட் கும்பல்'. அத்தகைய தலைவரால் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியாது.

   வாரிசு தலைவரைத் தேடும்போது, முன்னாள் போராட்டத் தலைவர்கள் சிலரை சபாநாயகருடன் கலந்துரையாடலுக்கு அழைத்து வந்தனர்.

   ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தாம் விரும்பிய தலைவரைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தத் தலைமையை ஒப்படைத்தார்.

   இன்று பங்களாதேஷுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். ஒரு வாரிசு ஜனாதிபதியாக வந்து இரண்டு நாட்கள் செல்லவில்லை. நாட்டின் பாதுகாப்புத் தலைவரும் மத்திய வங்கி ஆளுநரும் இராஜினாமாச் செய்ய வேண்டியிருந்தது. அந்த நாட்டில் இன்றும் வன் முறைகள் தொடர்கின்றன.

   தங்கள் கருத்தை மதிக்காதவர்கள் தெருவில் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். பல்கலைக் கழக மாணவர்கள் தங்கள் கருத்தை ஏற்கவில்லை என்றால், அவர்கள் அவர்களை பல்கலைக் கழக கட்டடங்களுக்கு வெளியே இழுத்து கொலை செய்கிறார்கள். அதுதான் நம் நாட்டின் தலை விதியும். 

   ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்றதால், அந்த விதி பறிபோனது. இவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளிக்காமல், இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டியவர் ரணில் விக்கிரமசிங்க என்பதை, நாம் நினைவில் கொள்ள வேண்டும். அத்தகைய தலைவர் நாட்டுக்குத் தேவை. 

   எமக்கு 69 இலட்சம் வாக்குகள் வழங்கப்பட்டு, மூன்றில் இரண்டு பங்கு அதிகாரம் வழங்கப்பட்ட போதும், எங்களால் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியவில்லை. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் ஐந்து அமைச்சர் பதவிகளை வகித்துள்ளனர். ஆனால், இந்த நாட்டில் உரப் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க முடியவில்லை.

   நாங்கள் சொன்னதைக் கேட்கவில்லை. விவசாயிகள் எங்கள் மீது கோபத்தில் உள்ளனர். விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. ஆசிரியர்களின் சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு பிரச்சினை ஏற்பட்டது. ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையைத் தயாரித்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். அதைச் செய்ய முடியாமல் போனது" எனத் தெரிவித்தார்.



VIDEOS

RELATED NEWS

Recommended