![](assets/tgi-logo2.jpg)
தமிழரசுக்கட்சிக்கு புதிய நிர்வாகம்!! மத்தியகுழு தீர்மானம்!! வழக்காளிக்கு நிவாரணங்களை வழங்கவும் முடிவு!
![தமிழரசுக்கட்சிக்கு புதிய நிர்வாகம்!! மத்தியகுழு தீர்மானம்!! வழக்காளிக்கு நிவாரணங்களை வழங்கவும் முடிவு!](https://api.thegreatindianews.com/uploads/original/sivagnanam-shritharan.jpg)
![](assets/avatar-profile-icon.webp)
வவுனியா
UPDATED: May 19, 2024, 3:01:06 PM
தமிழரசுக்கட்சி மீது திருகோணமலை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முடிவுறுத்தி கட்சியின் தெரிவுகளை மீளவும் நடத்துவதற்கு கட்சியின் மத்தியகுழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.
திருகோணமலை நீதிமன்றில் உள்ள கட்சி தொடர்பான வழக்கில் வழக்காளி கோருகின்ற நிவாரணங்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். அந்தவகையில் கட்சியின் நிலைப்பாடுகளை நிலைநிறுத்தி யாப்பினுடைய அடிப்படை விடயங்களை முன்னிறுத்தி எவ்வாறு செயலாற்றியிருக்கின்றோமோ அதனடிப்படையில் தலைவர் உட்பட அனைத்து பதவிகளிற்கான தெரிவுகளையும் மீள நடாத்துவதென ஏகமனதாக தீர்மானித்திருக்கின்றோம்.
அந்தவகையில் முதலில் வழக்கை கைவாங்கி கட்சியினை எமது வீட்டிற்கு கொண்டுவருவதற்கான முயற்சியினை எடுத்திருக்கின்றோம்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் தொடர்பாக இன்று பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. சிரேஸ்ட தலைவர்களான சம்பந்தன், மாவைசேனாதிராஜா அவர்களின் கருத்துக்களும் பரிசீலிக்கப்பட்டது.
இவற்றினை ஒரு ஆலோசனைக்காக எடுத்திருக்கின்றோம். இது தொடர்பாக தொடர்ந்தும் மத்தியசெயற்குழு மாவட்டக்கிளைகளுடன் கூடி உரியநேரத்தில் முடிவினை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
அதுவரை கட்சியின் தலைவராக மாவைசேனாதிராஜாவும் பொதுச்செயலாளராக ப.சத்தியலிங்கமும் செயற்படுவார்கள். எமது கட்சி இயங்கிக்கொண்டிருக்கின்றது. வழக்கு செயற்பாடுகள் முடிவுறுத்தப்பட்ட பின்னர் புதிய தெரிவுகள் இடம்பெறும். என்றார்.