• முகப்பு
  • குற்றம்
  • திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களை அடித்து நொறுக்கிய வீடியோ வைரல்.

திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களை அடித்து நொறுக்கிய வீடியோ வைரல்.

மைக்கேல்

UPDATED: May 20, 2024, 12:31:27 PM

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை பகுதியில் டிடிபிஎல் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சுங்கச்சாவடியில் நேற்று (19ம் தேதி மாலை சென்னையில் இருந்து திருச்சி நோக்கி திமுக கொடி கட்டி வந்த சொகுசு கார் (TN_14, AH- 5) ஒன்று சுங்கச்சாவடியில் பாஸ் டாக் மூலம் கட்டணம் செலுத்த முயன்ற போது அது காலாவதியாகியது என்று தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, ரொக்கமாக சுங்க கட்டணத்தை செலுத்துமாறு அதன் ஊழியர்கள் அந்த காரை ஓட்டி வந்தவரிடம் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு அவர் பணம் கட்ட முடியாது, நான் வழக்கறிஞர், திமுக கவுன்சிலர் என்று கூறி, என்னிடமே பணம் கேட்கிறீர்களா என்று கூறி திட்டியவாறே வேக வேகமாக எடுத்துள்ளார்.

மேலும் அங்குள்ள தடுப்புகளை உடைத்துக் கொண்டு அந்த கார் செல்லும் போது, சுங்க சாவடி ஊழியர்கள் அதனை தடுத்துள்ளனர். இதனால் மேலும் கோபமடைந்த அந்த காரை ஓட்டி வந்த நபர் அதனை நிறுத்திவிட்டு இறங்கி வந்து, சுங்க சாவடி ஊழியர்களை திடீரென கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காரில் இருந்த பெண் உள்ளிட்ட சிலரும் இறங்கி வந்து ஊழியர்களை தாக்கியுள்ளனர். இதில் சுங்கச்சாவடி சூப்பர்வைசர் மணிகண்டன், சுங்க கட்டணம் வசூலிப்பாளர் பாண்டியன் ஆகியோர் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த காரில் வந்தவர்கள் தப்பி சென்று விட்டதால், கார் யாருக்கு சொந்தமானது, அதை ஓட்டி வந்தவர் யார், அவர்களது விலாசம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, அவர்களை தேடி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended