ரூ.15ஆயிரம் லஞ்சம் திருச்சியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது.
JK
UPDATED: Apr 20, 2023, 7:42:35 AM
திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (45) கட்டிட காண்ட்ராக்டர்.
இவர் தனது நண்பர் பாலு என்பவருக்கு திருச்சி கம்பரசம்பேட்டை ஜெயராம் நகரில் வீடு கட்டி கொடுத்து அந்த வீட்டுக்கான மின் இணைப்பும் வாங்கி கொடுத்தார்.
பாலு அந்த குடியிருப்பினை வணிக வளகமாக மாற்ற முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து குடியிருப்புக்கான மின் இணைப்பினை வணிக பயன்பாட்டுக்கு மாற்றி தரும்படி கடந்த ஜனவரி மாதத்தில் உரிய ஆவணங்களுடன் தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள சிந்தாமணி பிரிவில் விண்ணப்பம் செய்தார்.
விண்ணப்பித்து மூன்று மாதங்கள் கடந்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லாததால் காண்ட்ராக்டர் வெங்கடேசன் சம்மந்தப்பட்ட சிந்தாமணி பிரிவுக்கான உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் என்பவரை கடந்த 17ம் தேதி சந்தித்து விண்ணப்பத்தின் நிலை குறித்து விசாரித்த போது அதற்கு ராஜேஷ் மின் இணைப்பின் கட்டணம் மாற்றம் செய்து தருவதற்கு லஞ்சமாக ரூ.20 ஆயிரம் கேட்டுள்ளார்.
மேலும் வெங்கடேசன் கேட்டுக் கொண்டதின் பேரில் ராஜேஷ் ரூபாய் 5000 குறைத்துக் கொண்டு 15 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு மாற்றம் செய்து தருவதாக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் இடம் புகார் தெரிவித்தார்.
வெங்கடேசனின் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று வெங்கடேசனிடம் இருந்து உதவி பொறியாளர் ராஜேஷ் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.