![](assets/tgi-logo2.jpg)
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளான்டில் விலை உயர்ந்த 120 அடி நீளமுள்ள காப்பர் வயர்கள் மீண்டும் திருட்டு
![காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளான்டில் விலை உயர்ந்த 120 அடி நீளமுள்ள காப்பர் வயர்கள் மீண்டும் திருட்டு](https://api.thegreatindianews.com/uploads/original/expensive-copper-wires-of-120-feet-length-in-oxyge.jpg)
![](assets/avatar-profile-icon.webp)
லட்சுமி காந்த்
UPDATED: May 6, 2024, 7:18:08 PM
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகளும் வந்து செல்கின்றனர். 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த தலைமை மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தின் கைவிடப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் அருகே உள்ள ஆக்சிஜன் பிளான்ட்டிலிருந்து, 90 மில்லிமீட்டர் கனமுள்ள "120 அடி நீளமுள்ள விலையுயர்ந்த காப்பர் வயர்கள்" திருடப்பட்டது. இதனால் ஆக்சிஜன் பிளான்ட் தற்சமயம் இயக்குவதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
சுமீட் என்ற தனியார் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பணி புரிகின்றார்கள். பலமான செக்யூரிட்டிகள் இருந்தும் அவ்வப்போது இந்த மருத்துவமனையிலிருந்து ஏராளமான பொருட்கள் திருடு போகின்றது.
அதிலேயும் உயிர்காக்கும் உபகரணங்களான வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச கருவி 6 , விலையுயர்ந்த எக்ஸ்ரே பேட்டரி 168, குளிர்சாதனப் பெட்டி எண்ணிக்கை 4 (ஏசி), இன்வெண்டர் 20, புதிய நவீன லேப்டாப் 36, சுமார் 100 கிலோ எடையுள்ள காப்பர் கம்பிகள்,
விலை உயர்ந்த உயிர் காக்கும் கொரோனா (ரெம்டிசீவர் - இந்த மருந்து கிடைக்காமல் பலர் இறந்து போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது) மருந்துகள் , நீரிழிவு மாத்திரைகள், பெட் சீட் என சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் ஏற்கனவே திருடப்பட்டு "இதுநாள்வரையில் கண்டுபிடிக்கவில்லை."
பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது சம்பந்தமாக விஷ்ணு காஞ்சி காவல்துறையினரிடம் புகார் கொடுத்துவிட்டு இதை *மேலோட்டமாக விசாரித்தால் மட்டும்* போதும் ,மிகவும் டீப்பாக விசாரணை செய்ய வேண்டாம் என , ஏற்கனவே பொறுப்புக் கண்காணிப்பாளராக பணிபுரிந்த மருத்துவர் கல்பனா அவர்கள் கூறியதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட மருத்துவமனை இணை இயக்குனர் நலப்பணிகள் கோபிநாத் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் எந்தவிதமான தீவிர நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தான் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து விலை உயர்ந்த உபகரணங்கள் அவ்வப்போது திருடப்படுகிறது என பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
மேலும் இது எங்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றது என்றும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மிக புனிதமான இடமாக கருதப்படும் அரசு மருத்துவமனையிலிருந்து முக்கிய உபகரணங்களை களவாடிச் செல்கின்ற அயோக்கியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் வைக்கின்றனர்.
அரசு மருத்துவமனையிலிருந்து ஒரு குண்டூசி காணாமல் போனால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு விதிமுறைகள் உள்ள நிலையில், மருத்துவமனை நிர்வாகம் ஏன் அமைதி காக்கின்றது என தெரியவில்லை.
எனவே சிபிஐ விசாரணை நடந்தால் தான் எத்தனை கோடி ரூபாய் பொருட்கள் திருடு போனது கண்டறிய முடியும் என நோயாளிகள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்படுகின்றது.
கடந்த வாரம் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள உயிர் காக்கும் உபகரணங்கள் திருடு போனது சம்பந்தமாக ஏற்கனவே மருத்துவமனை (பொறுப்பு) கண்காணிப்பாளராக பணிபுரிந்த மருத்துவர் கல்பனா, செவிலியர் இந்திரா, ஆண் செவிலியர்கள் அருள் , சீனிவாசன் , அலுவலக உதவியாளர் தனஞ்செழியன் ஆகியோரிடம் இணை இயக்குநர் & நலப்பணிகள் கோபிநாத் அவர்கள் விசாரணை செய்தார்.
இந்த விசாரணை கண்துடைப்பாக செய்யப்பட்டது என்றும் இந்த விசாரணையின் போது நிர்வாக அலுவலர் முனியாண்டி என்பவர் உடனிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக பேசினாரா என்பதும் குறிப்பிடத்தக்கது.
உயிர் காக்கும் உபகரணங்கள் திருடு போன சம்பந்தமாக மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது விசாரணை நடைபெற்றது மருத்துவமனையின் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துள்ளது.