![](assets/tgi-logo2.jpg)
விவசாயிகளை ஏமாற்றி போலி உரம் விற்பனை உறங்கும் வேளாண்மை துறை.
![விவசாயிகளை ஏமாற்றி போலி உரம் விற்பனை உறங்கும் வேளாண்மை துறை.](https://api.thegreatindianews.com/uploads/original/the-agriculture-department-is-sleeping-by-selling.jpg)
![](assets/avatar-profile-icon.webp)
சண்முகம்
UPDATED: Jun 8, 2024, 5:53:38 AM
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சக்திவிளாகம் கிராமம் இருந்து வருகிறது. இக்கிராமத்திற்கு பிக்கப் வேனில் ஏராளமான உர மூட்டைகளை கொண்டு வந்த நபர்கள் பிரபல கம்பெனி பெயரில் விவசாயிகளிடம் இயற்கை உரம், நேரடி விற்பனை என்று கூறி ஒரு மூட்டை போலி உரத்தை 1150 ரூபாய் என விற்பனை செய்துள்ளனர். அவற்றிற்கு பில்லும் தந்தனர்.
இதனை விவசாயிகள் பலர் வாங்கி பார்த்தபோது அந்த உரம் செம்மண்ணை குழைத்து சிறு சிறு உருண்டைகளாக மண் போன்று இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த விவசாயிகள் அவர்களைக் கேட்டபோது பார்ப்பதற்கு மண் போன்று தான் இருக்கும் என்று கூறி, சக்தி மிக்க இயற்கை உரம் இதனை நெல் பயிருக்கு இடும்போது ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக விளைச்சல் இருக்கும் என்று ஆசை வார்த்தை கூறி விவசாயிகள் பலரிடம் உரத்தை விற்றுவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.
அருகில் 500 மீட்டர் தூரத்தில் கீரப்பாளையம் வட்டார வேளாண்மை அலுவலகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக கடந்த இரண்டு நாட்களாக புவனகிரி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உரக்கடைகளில் ஆய்வு செய்தோம் என்ற பெயரில் வேளாண்மை துறை அதிகாரிகள் போலி உரம் விற்கக் கூடாது, அதிக விலைக்கு உரம் விற்கக்கூடாது என்று கூறி பத்திரிகைகளில் செய்தி மட்டுமே வர வைத்தனர்.
ஆனால் தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் குறித்து விவசாயிகள் தெரிவிக்கும் போது கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை துறை உறங்குகிறது என்று வேதனையோடு குறிப்பிட்டு வருகின்றனர்.
மேலும் தற்போது இப்பகுதிகளில் விவசாயிகள் குறுவை நடவு பணிகளை செய்து வருவதால் அவர்களை குறி வைத்து மர்மநபர்கள் போலி உரத்திணை விற்பனை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே மின்வெட்டு, பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பது சிக்கல் என பல இன்னல்களை பட்டு விவசாயம் செய்து வந்தாலும் தற்போது போலி உரம் என்று விவசாயிகளை மேலும் வஞ்சிக்கும் விதமாக அவர்களை குறி வைத்து போலி உரம் விற்பனை செய்து வருவது மேலும் அவர்களை வேதனையில் ஆழ்த்தி வருகிறது.
இவைகளை ஆய்வு செய்து தடுக்க வேண்டிய வேளாண்மை துறையினர் எப்போதும் தங்களை விளம்பரப் படுத்திக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக இருந்து வருகின்றனர் என விவசாயிகள் வேதனையோடு குறிப்பிட்டு வருகின்றனர்.