• முகப்பு
  • குற்றம்
  • 290 சொத்து ஆவணங்களும், 45வங்கி கணக்கு புத்தகங்களும், 60புரோநோட்டுகளும் பறிமுதல் - அகழி ஆப்ரேஷன் தனிப்படையினர் அதிரடி

290 சொத்து ஆவணங்களும், 45வங்கி கணக்கு புத்தகங்களும், 60புரோநோட்டுகளும் பறிமுதல் - அகழி ஆப்ரேஷன் தனிப்படையினர் அதிரடி

JK

UPDATED: Oct 8, 2024, 8:29:21 PM

திருச்சி மாவட்டம்

திருச்சி மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில்

திருச்சி மாநகர ஆணையர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உத்தரவின் பேரில் "ஆபரேசன் அகழி" என்ற பெயரில் காவல் ஆய்வாளர்களின் தலைமையில் ஏற்கனவே 14தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்படி குற்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் நபர்களின் முதல் பெயர் பட்டியல் தயார் செய்து, அதிரடியாக கடந்த 19.09.2024-ம் தேதி அவர்களது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, பல்வேறு ஆவணங்கள், கணக்கில் வராத பணம், நகைகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.

ஆபரேசன் அகழி

இதனை தொடர்ந்து நேற்று ஆபரேசன் அகழி" 2-வது பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் தொடர்புடைய நபர்களான 1) பால்ராஜ், 2) விமல் (எ) செல்வ குமார், 3) ஸ்டீபன் ராஜ், 4) ராமு, 5) நாகேந்திரன் (எ) பாம்புகுட்டி நாகேந்திரன், 

6) நவீன் குமார், 7) ராஜா, 8) பெரியசாமி (எ) கருவாடு பெரியசாமி. 9) ரமேஷ், 10) சன்னாசி (எ) செந்தில், 11) ஆனந்த், 12) காத்தான் (எ) காத்தப்பிள்ளை. 13) கங்கா (எ) திலீப் குமார், 14) விசு (எ) விசுவநாதன், 15) முருகானந்தம் மற்றும் 16) மணிமாறன் ஆகியோர்களின் விபரங்களை சேகரித்து அதிரடியாக அவர்களது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் ஆபரேசன் அகழி" 2-வது பட்டியல் சோதனை முடிவில் மேற்படி நபர்களுக்கு தொடர்பில்லாத 290சொத்து ஆவணங்களும், 45வங்கி கணக்கு புத்தகங்களும், 60புரோநோட்டுகளும், 22நிரப்பப்படாத காசோலைகளும், 5செல்போன்களும், 13சிம்கார்டுகளும், பிற ஆவணங்களும், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

மேற்படி கைப்பற்றப்பட்ட பத்திரங்களும் அனைத்தும் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும், கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை என விசாரணையில் தெரியவருகிறது.

மேலும் ஆபரேஷன் அகழி துவங்கும் போது ஒரு பெயர் பட்டியல் தான் இருந்தது. 2-வது பெயர் பட்டியல் உள்ள 16 நபர்களை நேற்று அவர்கள் வீடு மற்றும் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆபரேஷன் அகழி நடவடிக்கையால் கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நிறைய மனுதாரர்கள் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை அணுகியுள்ளனர்.

குறிப்பாக புதன்கிழமை குறை தீர்ப்பு முகாமில், பெற்ற மனுக்கள் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் 3 மற்றும் 4-வது பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு சோதனைக்கான ஆயத்த பணிகளும் தற்போது நடைபெற்றுவருகிறது.

மேலும் ஆபரேசன் அகழியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் எதிரிகளை தனிப்படை அமைத்து விரைந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில், நில உரிமையாளர்களை யாரேனும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு செய்யும் நபர்களோ, சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாக மிரட்டினாலோ அவற்றை ஆடியோ, வீடியோ, CCTV ஆதாரங்களுடன் புகார் அளிக்குமாறும், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், அவர்களின் உதவி எண்.97874 64651 என்றஎண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுறது.

 

VIDEOS

Recommended