10 இலட்சம் புதிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தை மன்னாரில் ஆரம்பிக்க சஜித் உறுதி
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Jul 16, 2024, 5:28:19 AM
மன்னார் மாவட்டம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலகங்களையும் மையப்படுத்தி மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 316 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன மன்னார், கருங்கண்டல், றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 15 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை நூலகத்திற்குத் தேவையான ஆங்கில நூல்களைக் கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னாரில் நிலவும் கடற்தொழில் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்.
வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மூலம் அனுமதியின்றி அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மூலம் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே உரிய நாடுகளோடு இராஜதந்திர ரீதியிலாக பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை பெற்றுத் தருவேன் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்திற்கு தொழிற் பேட்டை.
மன்னார் மாவட்டத்தில் காணப்படும் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதிகள் குறித்து கவனம் செலுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வேன். பிரதேச செயலக மட்டத்தில் கைத்தொழில் பேட்டைகளைத் தாபிப்பேன்.
பிரதேச செயலக மட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை நிறுவி, 10 இலட்சம் புதிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தை மன்னார் மாவட்டத்திலும் முன்னெடுப்பேன்.
அதேபோல், விவசாயத்தில் புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி மன்னார் மாவட்ட விவசாயத் துறையையும் மேம்படுத்த எதிர்பார்க்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சாதி, மத வேறுபாடுகளை விடுத்து ஒன்றாய் முன்னோக்கிப் பயணிப்போம்.
சகோதரத்துவம், இனங்கள், மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை நட்புறவு என்பது நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான விடயங்களாகும். அரசியலமைப்பிற்கு திருத்தமாக கொண்டு வரப்பட்டுள்ள 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம், அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களுக்கு மட்டுமல்லாது முழு நாட்டு மக்களையுமே பாதிக்கிறது. 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து பேசுவது போல, மாகாண சபைகளை அமைப்பது போல,
குறிப்பிட்ட அதிகாரங்களுடன் கூடிய அபிவிருத்திப் பணிகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து அரசாங்கம் பொய்யாகப் பேசிக் கொண்டிருந்தாலும், அதனை அர்த்தமுள்ளதாக்க, வழங்கப்பட்ட அதிகாரங்களின் ஊடாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை முன்னைய அரசாங்கங்கள் வழங்கத் தவறிய போதிலும், அந்தத் தவறை நான் சரிசெய்வேன்.
மத்திய அரசாங்கத்திடம் இருந்து மாகாண சபைகளுக்கு உரிய ஒதுக்கீடுகள் வழங்கப்படாத நிலை காணப்படுகிறது. இது வடக்கு கிழக்கு மாத்திரமல்ல, முழு நாட்டிலும் ஒன்பது மாகாணங்களிலும் இந்த பிரச்சினை இருந்து வருகிறது. இதன்பொருட்டு, உரிய நிதிகளை மாகாணங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.