தேனி மாவட்டத்தில் உச்சம் தொட்ட தக்காளி விலை கிலோ ரூ.120க்கு விற்பனை

ராஜா

UPDATED: Jun 13, 2024, 5:41:47 PM

தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒருகிலோ தக்காளி ரூ.100 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தேனி மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒருகிலோ தக்காளி ரூ.120ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர் பகுதிகளில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த காய்கறி மார்க்கெட் மூலம் தேனி மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த காய்கறி மார்க்கெட்டிற்கு கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்ததால் தற்போது 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி ரூ.1300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறையில் ஒருகிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ 120 ஆக உயர்ந்ததால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் வெயில் மற்றும் அவ்வபோது பெய்து வரும் மழையின் காரணமாக தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடிகளில் பூக்கள் உதிர்ந்து விளைச்சல் அடியோடு சரிந்துள்ளது.

இதன் காரணமாக ஆந்திராவில் இருந்து தேனிக்கு தக்காளி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அன்றாட சமையலுக்கு தக்காளி அவசியமான பொருள் என்பதால் இந்த விலை உயர்வு நடுத்தர மற்றும் சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended