இரண்டரை வருடத்திற்கு பின்பு சிக்கிய கொலை குற்றவாளி

JK

UPDATED: Jun 18, 2024, 5:03:54 AM

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் பிரபு(37) என்பவர் கடந்த 27.11.2021-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2 ½ வருடங்களாக குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் இருந்த மேற்படி வழக்கினை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் வழக்கினை ஆய்வு செய்து தனி கவனம் செலுத்தினார்.

தொடர்ந்து திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் காவல் ஆய்வாளர் வீரமணி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனிப்படை அமைத்து உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மேற்படி கொலை வழக்கு தொடர்பாக தனிப்படையினருடன் ஒருங்கிணைந்து விசாரணை  மேற்கொண்டு வந்தனர்.

கொலை வழக்தில் தொடர்பாக, மேற்படி கொலையுண்டு இறந்த நபர்க்கு சொத்து பிரச்சனை, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, பெண்கள் தொடர்பான பிரச்சனை, குடிபோதையில் ஏற்பட்ட முன் விரோதம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சந்தேகங்களை அடிப்படையாக வைத்து விசாரணை செய்தனர்.

தொடர்ந்து விசாரணையில் அடிப்படையில் தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்டம், ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் மகன் ரமேஷ்(29)என்பவரை கடந்த 15ஆம் தேதி அழைத்து விசாரணை மேற்கொண்ட போது பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, பிரபுவை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

மேலும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் இறந்த நபரின் செல்போன் ஆகியவற்றை, அதே கிராமத்தில் உள்ள தெற்கு காலணியில் உள்ள மாணிக்கம் என்பவரது கிணற்றில் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தடயங்கள் அனைத்தையும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சேகரித்து ரமேஷ் கைது செய்தனர்.

கடந்த 2 ½ வருடங்களாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்த கொலை வழக்கினை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தனி கவனம் செலுத்தி, தனிப்படை அமைத்து வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளியை தனிப்படையினர் மூலம் கைது செய்துள்ளனர்.

மேற்படி தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரூ.15000/- பண வெகுமதி அறிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended