• முகப்பு
  • இலங்கை
  • தென் கொரிய ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவர் சபாநாயகரைச் சந்தித்தார்

தென் கொரிய ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவர் சபாநாயகரைச் சந்தித்தார்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 22, 2024, 5:01:36 PM

தென் கொரியாவின் ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவரும் செயலாளர் நாயகமுமான சுங் சியுங்-யுன் (Chung Seung-yun) அவர்கள் தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவினர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (21) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுங் சியுங்-யுன் அவர்கள் குறிப்பிடுகையில், கடந்த வருடம் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டம் மிகவும் பலம் வாய்ந்த ஒரு சட்டமாகும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு தென் கொரியாவில் நடைமுறைப்படுத்தப்படும் பொது நிறுவங்களுக்கான ஒருமைப்பாடு மதிப்பீட்டு முறைமையை (Integrity Assessment System) இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  


இதன் போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், இலங்கையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டம் முற்றுமுழுதாக சுயாதீனமானது எனவும் அதன் மூலம் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு சுயாதீனமான இயங்கக் கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

அத்துடன், ஏனைய ஆதரவளிக்கும் நாடுகளுடன் இணைந்து இதனை செயல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். 

அதற்கு மேலதிகமாக, தென்கொரியாவில் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் செயன்முறை, விசாரணை நடவடிக்கைகளின் தன்மை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டத்துடன், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் இந்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


இந்த சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். 

அத்துடன், தென் கொரியாவின் ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் லீ பீம் சியோக், பிரதிப் பணிப்பாளர் மூன் ஜோங்பில், உதவிப் பணிப்பாளர் செல்வி லீ கா யோன், இலங்கையின் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி எம்.ஆர்.வை.கே. உடுவெல மற்றும் உதவிப் பணிப்பாளர் நாயகம் திருமதி டபிள்யு.எம்.டி.டீ. பண்டார ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். 

 

#SLparliament #lka #SriLanka 🇱🇰 #SouthKorea 🇰🇷 #9thParliamentLK

VIDEOS

Recommended