தீவிரமடையும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நள்ளிரவில் பந்தல்களை பிரித்த  போலீஸார்.

லட்சுமி காந்த்

UPDATED: Oct 9, 2024, 1:20:32 PM

காஞ்சிபுரம் மாவட்டம்

சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நள்ளிரவில் 7 பேரை கைது செய்தனர். மேலும் போராட்டப் பந்தல்களை பிரித்தெரிந்தனர்.

போராட்டத்துக்குள் மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகள் நுழைந்து கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறி போராட்டத்துக்கு வரும் தொழிலாளர்களிடம் அடையாள அட்டை உள்ளதா என்று சோதனை நடத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில், ஏசி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்த தொழிற் சாலையில் சிஐடியூ சார்பில் சங்கம் அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற 7 கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் 7 பேரை காவல் துறையினர் வீடுவீடாகச் சென்று கைது செய்தனர்.

அதிகாலை போராட்டத்துக்கு வரும் ஊழியர்களிடம் அடையாள அட்டை உள்ளதா என்பது தொடர்பாகவும் சோதனை நடத்தினர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் மினி லாரியில் ஏறிச் சென்றபோது அந்த லாரி கவிழ்ந்து சிலர் காயமடைந்தனர்.

அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஈடுபட்டபோது அவரையும், போலீஸாரையும், முத்துக்குமார், எலன், ஆசிக் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் பணி செய்யவிடாமல் தடுத்தனர்.

இதனைத் தொடர்ந்தே ராஜபூபதி, ஆசிக் அகமது, பாலாஜி உள்பட 7 பேரை கைது செய்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என்றனர்.

இந்நிலையில் காலையில் போராட்டத்துக்கு வந்த ஊழியர்களை பேருந்திலேயே மறித்து காவல் துறையினர் அவர்கள் அடையாள அட்டையை காட்டக்கோரி சோதனை நடத்தினர்.

இதனால் பல்வேறு இடங்களில் தொழிலாளர்களுக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் சமூக விரோதிகள், மாவோயிஸ்டுகள் தொழிலாளர்கள் என்ற போர்வையில் உள்ளே நுழைந்து அரசுக்கு எதிரான போராட்டமாக திசை திரும்பவும், வண்முறையை தூண்டிவிடவும் முயற்சிப்பதால் இந்தச் சோதனை நடைபெறுவதாக தெரிவித்தனர்.

சாம்சங் ஊழியர்களின் இந்தப் போராட்டத்துக்கு திமுக தவிர்த்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தும் இடத்துக்கு அந்தக் கட்சிகளின் தலைவர்கள் தோழர் கே.பாலகிருஷ்ணன், தோழர் முத்தரசன், தொல்.திருமாவளவன், தி.வேல்முருகன் உள்ளிட்டோர் வர உள்ளதாகவும் கூறினர். 

போலீஸாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் மோதல் போக்கு வலுத்து வந்த நிலையில் , திடீரென மழை பெய்தது. கொட்டும் மழையிலும் சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

காவல்துறையினர் போராட்டம் நடத்தி வருகின்ற சாம்சங் ஊழியர்களை வலுக்கட்டாயப் படுத்தி கைது செய்து வாகனத்தில் ஏற்றி வாலாஜாபாத் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் சுங்குவார்சத்திரம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended