• முகப்பு
  • சினிமா
  • மகராஜா திரைபடத்தின் கதையை திருடிட்டாங்க..!பழனியை சேர்ந்த நாகன் என்கிற மருதமுத்து பரபரப்பு குற்றச்சாட்டு.

மகராஜா திரைபடத்தின் கதையை திருடிட்டாங்க..!பழனியை சேர்ந்த நாகன் என்கிற மருதமுத்து பரபரப்பு குற்றச்சாட்டு.

கண்ணன்

UPDATED: Jun 25, 2024, 4:56:31 AM

மகாராஜா திரைப்படத்தின் கதை திருடப்பட்ட கதை என்றும், அத்தியாயம் ஒன்று என்ற பெயரில் எழுதப்பட்டு, தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக பதிவுசெய்யப்பட்ட கதையை திருடி மகாராஜா என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளதாகவும்,

இது குறித்து இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோரிடம் புகார் செய்துள்ளதாகவும் பழனியை சேர்ந்த தயாரிப்பாளர் நாகன் என்ற மருதமுத்து குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனியை பகுதியைச் சேர்ந்தவர் நாகன் என்கிற மருதமுத்து. இவர் கந்தவேல் என்கிற திரைப்படத்தை தயாரித்து உள்ள நிலையில் பல்வேறு காரணங்களால் வெளியிடாமல் வைத்துள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மகாராஜா திரைப்படம் திருடப்பட்ட கதை என்றும், முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது தனது கதையை திருடி படமாக்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களை இது குறித்து இன்று அவர் தெரிவித்ததாவது :- 

பழனி அருகே உள்ள மானூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஒரு கதையை எழுதி தன்னிடம் கூறியதாகவும் கதை நன்றாக இருந்ததால் 10 லட்சம் ரூபாய் கொடுத்து இந்த கதையை விலைக்கு வாங்கியதாகவும், அத்தியாயம் ஒன்று என பெயரிடப்பட்ட அந்த கதையை 2023ம் ஆண்டு தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக பதிவு செய்ததாகவும் கூறினார்.

மேலும் இக்கதையை குறும்படமாக எடுத்து அதை எடிட்டிங் செய்வதற்காக சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அத்தியாயம் 1 திரைக்கதையை திரைப்படமாக்க முடிவுசெய்து கடந்த ஆண்டு பிரபல திரைப்பட இயக்குனர் கே‌எஸ்.ரவிக்குமார், நடிகர் சார்லி மற்றும் நடிகை ரக்ஷனா ஆகியோரிடம் கதையை கூறி, 5.5கோடி ரூபாய் பட்ஜெட் செலவில் பழனி பகுதியில் படப்பிடிப்பு நடத்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும், படப்பிடிப்பு துவங்கிய நேரத்தில் பழனி பகுதியில் கனமழை பெய்ததால், படப்பிடிப்பை நடத்த முடியாமல் நிறுத்தி வைத்திருந்ததாகவும் கூறினார். 

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா என்ற திரைப்படம் வெளியானது. அந்த படத்தை பார்த்தபோது, தான் முறையாக பதிவு செய்திருந்த அத்தியாயம் ஒன்று திரைக்கதையை அப்படியே படமாக்கி உள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தோம் என்றும், இதுகுறித்து விசாரித்ததில் மகாராஜா திரைக்கதையை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது.

மேலும் தான் இக்கதையை குறும்படமாக எடுத்து படத்தொகுப்பு செய்ய கொடுத்த இடத்தில் இருந்து கதையை திருடி இருக்க வாய்ப்பு உள்ளது என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர்கள் பாக்கியராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை தனக்கு சரியான நியாயம் கிடைக்கவில்லை என்றும், தமிழ் திரையரகில் சிறு திரைப்பட தயாரிப்பாளர்கள் யாரும் பிழைக்க முடியாத நிலை உள்ளதாகவும், அதில் தானும் ஒருவனாக மாறியிருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.

மேலும் இதன்மூலம் தனக்கு 2கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மருதமுத்து தெரிவித்தார்.

எனவே தன்னுடைய புகாரை முறையாக விசாரித்து தனக்கு ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய வேண்டுமெனவும், இதுபோல் இனி ஒரு சிறு திரைப்பட தயாரிப்பாளரும் பாதிக்க கூடாது என்பதற்காக போராடுவதாகவும், இந்த விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்தார். 

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் கதை திருடப்பட்ட கதை என்று தயாரிப்பாளர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி : நாகன் (எ) மருதமுத்து திரைப்பட தயாரிப்பாளர், பழனி.

 

VIDEOS

Recommended