நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 18, 2024, 4:43:24 PM

ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவோம் என தலைவர்கள் வெட்டிக் கருத்து கூறினாலும் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதாக ஆட்சியாளர்கள் தலதா மாளிகையில் எழுதி கையொப்பமிட்டு கொடுத்தும் அந்தக் கதிரைக்குச் சென்ற பின் அதனை மறந்து விட்டிருக்கிறார்கள்.

தனக்கு பட்டம் பதவிகளில் ஆசைகள் இல்லாத காரணத்தினால் தான் அதிகாரத்திற்கு வந்த உடனே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்து பாராளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஜனநாயக ஆட்சி முறையை உருவாக்குவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நான்காவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ருவன்வெல்ல தெஹியோவிட்ட பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார். 

 

🟩 ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷாக்களை காப்பாற்றும் ஒரு ஐ.ஜி.பி.

 

தான் அதிகாரத்தை எடுக்கவில்லை என்று பல்வேறு தரப்பினர் கூறிக் கொண்டிருந்தாலும் ராஜபக்ஷாக்கள் உள்ள இடத்தில் தான் இருப்பதில்லை. இந்த நாட்டை அடி பாதாளத்துக்குள் தள்ளிய ராஜபக்ஷாகளுக்கு பிரதான பாதுகாவலராக இந்த நாட்டின் ஜனாதிபதி இருந்து வருகிறார். ராஜபக்ஷாக்களை பாதுகாக்கின்ற ஐ.ஜி.பி யாகவும், ராஜபக்ஷாக்களை பாதுகாக்கின்ற பொலிஸ்மா அதிபராகவும் இருந்து வருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

🟩 நான் பிரச்சினைகளை கண்டு தப்பியோட வில்லை.

 

தான் பிரச்சினைகளிலிருந்து தப்பிச் செல்வதில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கான சவால்களில் முன் நிற்கிறேன். வேறு வேட்பாளர்களை களமிறக்கி கட்சியின் தலைமைத்துவத்தை பாதுகாத்துக் கொள்கின்ற நிலைப்பாட்டில் தான் இருந்தது இல்லை என்றும் குறிப்பிட்டார். இன்னும் சில தினங்களில் வருகின்ற ஜனாதிபதி தேர்தலுக்காக, திருடர்களுடன் டீல் இல்லாத அரசியல் ஒப்பந்தங்களுக்காக மக்களை காட்டிக் கொடுக்காத மக்களின் வாக்குகளைப் பெற்று அவர்களை மறந்து விடாத நன்றி கடன் அறிந்த ஒரு யுகத்தை உருவாக்கி, அந்த யுகத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களை போஷிக்கும் சுவர்ண மயமான காலமாக மாற்றி திருடர்களை பிடிக்கின்ற யுகமாக மாற்றுவோம். திருடர்கள் மோசடிக்காரர்கள் ஊழல்வாதிகள் ஆகியோருடன் தமக்கு டீல் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

 

🟩 பதிலீடாக ஜனாதிபதி பதவி தேவையில்லை. 

 

திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகளுடன் டீல் இல்லாத காரணத்தினால் பதிலீடாக ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்கவில்லை. நான் இந்த ஜனாதிபதி கதிரைக்கு மக்களின் வாக்குகளாலே தெரிவு செய்யப்பட வேண்டும். இந்த நாட்டின் உரிமையாளராக அன்றி தற்காலிக பொறுப்பாளராக பொது மக்களின் சேவகனாக இருந்து திருடர்களால் திருடப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீண்டும் நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

🟩 இன்று நாட்டில் பழிவாங்கும் யுகம் காணப்படுகின்றது. 

 

எல்லையற்ற விதத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி பழி வாங்குதல், விரோதம், குரோதம், பேராசை என்பனவற்றை பயன்படுத்தி மக்களின் வாக்கு பலத்தை இல்லாமல் ஆக்கி தமது இருப்பை தக்க வைத்துக் கொள்கின்ற சுயநலத்தன்மை அதிகரித்து காணப்படுகின்ற ஒரு யுகத்தில் வாழ்கின்றோம். இந்த மக்கள் சமூகத்துக்குள் அசாதாரண தன்மையை ஏற்பட்டிருக்கிறது. வருமானம் பிரிந்து சென்று வறுமை அதிகரித்து காணப்படுகிறது. நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஏழைகளாக மாறியிருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த தீர்வும் இல்லை. கைக்குழந்தை முதல் சிறுவர்கள் வரையும், தாய்மார்கள் இளைஞர்கள் மாணவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என ஒட்டுமொத்த சமூகமும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உண்மையை பேசுகின்ற வெளிப்படை தன்மையுள்ள ஊழல் மோசடியற்ற ஒரு யுகத்தை உருவாக்கி ஒரு பொருளாதார மறுமலர்ச்சியை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்படுத்தும். நாட்டின் பொருளாதாரம் சிறைப்படுத்தப்பட்டுள்ளது.

 அது நுண் பொருளாதரத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டாலும், வரிசைகள் இல்லை என்றாலும், எல்லாம் ஒருநிலைப்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறினாலும் நிவாரணங்களை இல்லாது செய்து, அசௌகரியங்களை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கை தரத்தை மட்டுப்படுத்தி வரிசை யுகத்தை நிறைவு செய்திருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.⁸

🟩 மக்கள் ஏழைகளாக மாறி ஜனாதிபதியின் நண்பர்கள் பணக்காரர்களாக மாறி இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி நினைத்தபடி நாட்டில் சுற்றுப்பயணம் செல்கின்றார். அடியாட்களுக்கும் நண்பர்களுக்கும் ஒப்பந்தங்களை வழங்கி இலாபங்கள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. மக்கள் ஏழ்மைக்குள் சிக்கித் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

மூன்று வேளையும் உணவு உண்ண முடியாத மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் ஏழ்மையில் இருந்து மக்களை மீட்டெடுக்கின்ற யுகத்தை செப்டம்பர் 21 ஆம் திகதி உருவாக்குவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 தேயிலை பயிரிடப்படாத நிலங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவோம்.

தேயிலை பயிரிடப்படாத அரசாங்கத்தின் காணிகள் மற்றும் தேயிலை பயிரிடப்படாத தனியாரின் காணிகளை பெருந்தோட்டங்களில் சேவை புரிகின்ற தோட்ட தொழிலாளர்களுக்கும், தொழில் இல்லாத இளைஞர்களுக்கு வழங்கி சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றி அவர்களின் பங்களிப்பை தேயிலை உற்பத்திக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

நாட்டின் தேயிலை உற்பத்திக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்கின்ற உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்தார். 



VIDEOS

RELATED NEWS

Recommended