ரணிலின் அடுத்த காலப்பகுதியில் இரத்தினபுரியில் சகல வளங்களுடன் கூடிய தமிழ் கல்லூரியை கட்டி எழுப்ப இ.தொ.கா நடவடிக்கை எடுக்கும்!-இரத்தினபுரி பொதுக்கூட்டத்தில் ரூபன் பெருமாள்
Irshad Rahumathulla
UPDATED: Sep 16, 2024, 10:05:49 AM
இரத்தினபுரி மாவட்ட தமிழ் சமூகத்தின் நீண்ட கால தேவையாக இருக்கக்கூடிய உயர்தர கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளை உள்ளடக்கிய சகல வசதிகளுடன் கூடிய தமிழ் தேசிய கல்லூரியை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் அடுத்த காலப்பகுதியில் கட்டியெழுப்ப இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும் என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 16-09-2024
இரத்தினபுரி நகரில் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அங்கு அவர் உரையாற்றுகையில் -
இவ்வேலைத்திட்டத்திற்கான 05 ஏக்கர் காணியினை ஏற்கனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேண்டுகோளுக்கிணங்க இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும், அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் மலையக கல்வி வளர்ச்சி வேலைத் திட்டங்களின் ஊடாக இம் மாவட்ட தமிழ் மக்களின் கனவாக இருக்கும் இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முழுமையான ஆதரவோடு எதிர்வரும் 21 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்ஹ அவர்கள் இந்நாட்டில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ய இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் ரூபன் பெருமாள் ,இதன் போது தெரிவித்தார்.