சின்ன மாமனார் தலையில் கல் உரலை போட்டு கொன்ற மருமகன்.

செந்தில் முருகன்

UPDATED: Sep 27, 2023, 10:32:30 AM

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ஊராட்சி பர்மா காலனி கார்த்தி நகரை சேர்ந்தவர் பிரபாகர்(30). இவரது மனைவி மாலதி (27). இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், பிரபாகர் எந்த வேலைக்கும் செல்லாமல், குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்ததால், மாலதி கோபித்துக்கொண்டு திருவிழந்தூர் அப்பங்குளம் தெருவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனால் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் மாலதி சமாதானம் செய்ய வந்த பிரபாகர் அங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் குடித்துவிட்டு வந்து, மாலதியை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் பிரபாகர்.

ஆனால், மாலதி செல்ல மறுத்ததைத் தொடர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை, அப்பங்குளம் பகுதியில் வசிக்கும் மாலதியின் சித்தப்பா விவசாய கூலித் தொழிலாளியான பாக்கியம் (70) என்பவர் தட்டிக்கேட்டுள்ளார்.

இதையடுத்து, உன்னால் தான் எல்லா பிரச்சனையும், உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வீட்டு வாசலில் பாக்கியம் தலையில் கல் உரலை போட்டு, ரத்தம் சொட்ட சொட்ட இறந்த நிலையில் படுக்கையில் கிடந்தார்.

இதையடுத்து, டிஎஸ்பி சஞ்சீவ்குமார், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று பாக்கியத்தின் உடலைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பாக்கியத்தை கொன்றது அவரது மருமகன் பிரபாகர் தான் என்பது உறுதியானதைத் தொடர்ந்து அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, அப்பங்குளம் பகுதியில் உள்ள ஐயனார் கோயில் பகுதியில் தவமணி என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக பாண்டி சாராயம் விற்பனை நடந்து வருவதாகவும், பலமுறை காவல்துறையினரிடம் புகார் அளித்தும் தடுத்து நிறுத்தப்படவில்லை.

சாராய விற்பனையை தடுத்திருந்தால், இந்த சண்டை கொலையில் முடிந்திருக்காது என குற்றஞ்சாட்டிய அப்பகுதி பெண்கள் 10க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 சாராய மூட்டைகளை கைப்பற்றி எடுத்துவந்து, இறந்தவரின் வீட்டின் அருகே உள்ள திடலில் போட்டனர்.

அதனைக் கைப்பற்றிய போலீசார் உடனடியாக அதனை தீவைத்து  அழித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராய விற்பனை முழுவதுமாக கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக போலீசார் கூறிவரும் நிலையில், பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்திவந்து விற்பனை செய்யப்படுவது தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில், வெளிமாநில சாராய பாக்கெட்டுகளை கிராம பெண்களே கைப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாராய விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended