அண்ணன் தலையில் கல்லை போட்டுக் கொன்ற ‘பாசக்கார’ தம்பிகள்.

அஜித் குமார்

UPDATED: May 29, 2024, 7:13:28 PM

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இடம் தகராறு காரணமாக அண்ணனை தாக்கி தலையில் கல்லை போட்டு கொன்ற இரண்டு தம்பிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சின்னபுத்துாரை சேர்ந்தவர் விவசாயி மகேஸ்வரன், இவருக்கு பாஸ்கரன், ஜெய் கிருஷ்ணன், வெங்கடேசன் என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனித்தனியாக வீடு கட்டி வசிக்கின்றனர்.

இந்நிலையில் பாஸ்கரன் வீட்டில் அருகில் சுமார் 36 அடி இடம் சம்பந்தமாக அண்ணன் தம்பிகளிடையே முன்விரோதம் இருந்து வந்தன. இதனால் அடிக்கடி சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்படுவது வழக்கமாக உள்ளதாம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் இடம் தகராறு காரணமாக பாஸ்கரன், வெங்கடேசன், ஜெயகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆனது. பின்னர் ஜெயகிருஷ்ணன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் தனது அண்ணன் பாஸ்கரனை சரமாரியாக தாக்கினார்களாம்.

இதில் நிலைகுலைந்த பாஸ்கரன் ஓட்டம் பிடித்துள்ளார். இருப்பினும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வெங்கடேசன் மற்றும் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் பாஸ்கரனை துரத்தி தாக்கி தலையில் கல்லை போட்டு வெறித்தனமாக அடித்துள்ளனர்.

இதனால் பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாஸ்கரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் மற்றும் ஜெய் கிருஷ்ணன் ஆகியோரை தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்தது வெங்கடேஷன் மற்றும் ஜெயப்பிரீஸ்வரன் ஆகியோர் வாரியூர் கூட்ரோடு அருகில் இருப்பதை அறிந்த போலீசார் அவர்களை கைது செய்து ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் . பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைத்தனர்.

தலையில் கல்லை போட்டு அண்ணனை, தம்பிகள் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended