• முகப்பு
  • இலங்கை
  • வடக்கு மாகாண வரலாற்றில் மிகப்பெரிய குடிநீர் திட்டத்தை மக்களுக்கு கொண்டு வந்த ஜனாதிபதிக்கு, ஆளுநர் நன்றி தெரிவிப்பு

வடக்கு மாகாண வரலாற்றில் மிகப்பெரிய குடிநீர் திட்டத்தை மக்களுக்கு கொண்டு வந்த ஜனாதிபதிக்கு, ஆளுநர் நன்றி தெரிவிப்பு

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 2, 2024, 3:07:20 PM

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியுடன், யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் 02/08/2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், 

"வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய குடிநீர் திட்டத்தை வெற்றியடையச் செய்த ஜனாதிபதிக்கு நன்றி கூற வேண்டும். 2015 ஆம் ஆண்டில், அவர் பிரதமராக இருந்தபோது, முழுத் திட்டத்தையும் சீரமைத்து, தேவையான மேலதிக நிதியைப் பெற்றுக்கொண்டார்.

2017 ஆம் ஆண்டில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) மேலதிக நிதியுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் திட்டம் வலுவடைந்தது. இந்த ஒப்பந்தம் கடல் நீரில் உப்பு நீக்கும் நிலையத்தின் செயல்பாட்டை எளிதாக்கியதுடன், அதன் நிர்மாணம் மற்றும் ஐந்தாண்டு செயல்பாட்டு திட்டம் உட்பட செலவுகளை ஈடுசெய்ய உதவியது. ஜனாதிபதியின் அர்ப்பணிப்பின் பலனாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 3 இலட்சம் மக்களுக்கு நீண்டகாலமாக தேவைப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வசதி கிடைத்துள்ளது.

 மேலும், யாழ்ப்பாண நகரில் வாழும் 80,000 மக்களின் சுகாதார வசதிகள் மேம்பட்டுள்ளதுடன், வடமாகாண விவசாயத் துறையும் பெரும் நன்மைகளைப் பெற்றுள்ளது. இந்த திட்டம் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய குடிநீர் திட்டமாகும். திட்டத்தை நிறைவு செய்ய உதவிய கிராம மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி," என்று கூறினார்.

 

VIDEOS

Recommended