- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி.
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி.
மகேஷ் பாண்டியன்
UPDATED: Sep 26, 2023, 8:13:12 PM
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று பெங்களூருவில் ஒரு நாள் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி, சாம்ராஜ் நகர் வழியாக மைசூர் மற்றும் பெங்களூர் செல்ல வேண்டிய தமிழக பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் இங்கிருந்து செல்ல வேண்டிய பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
சத்தியமங்கலத்தில் இருந்து செல்ல வேண்டிய தமிழக பதிவு எண்கள் கொண்ட 9 அரசு பேருந்துகளும் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டது. இவை தவிர ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் இருந்து சத்தியமங்கலம் வழியாக மைசூர் செல்ல வேண்டிய பேருந்துகளும் வராததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
தாளவாடிக்கு செல்ல வேண்டிய தமிழக பேருந்துகள், கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியான புளிஞ்சூர் வழியாக அன்றாடம் சென்று வருவதால், அந்த பேருந்துகள், மற்றொரு மாற்றுப்பாதையான அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் தலமலை வழியாக தாளவாடிக்கு செல்கிறது.
மேலும் திம்பம் மலைப்பாதை வழியாக ஆறு சக்கர கனரக வாகனங்கள் மட்டுமே கர்நாடக மாநிலத்திற்கு சென்று வந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் பந்து காரணமாக, வாகனங்கள் தாக்கப்படலாம், ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சத்தின் காரணமாக லாரிகள் எதுவும் செல்லவில்லை.