இரண்டே நாளில் 1000 புத்தகங்கள் சிறை கைதிகளுக்காக தானம்.

இளவரசன்

UPDATED: Mar 27, 2023, 12:15:00 PM

திருவாரூர் மாவட்டத்தில் முதல் முறையாக திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் புத்தகத் திருவிழா கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த புத்தக திருவிழா மார்ச் 25 முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த புத்தக திருவிழாவில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பொதுமக்கள் என பல தரப்பினரும் வந்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

மேலும் இந்த புத்தகத் திருவிழாவில் மாலை நேரங்களில் சிந்தனையாளர்கள் பேச்சாளர்கள் பங்குபெறும் கருத்தரங்கு மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்குபெறும் பேச்சு கட்டுரை கவிதை உள்நிட்ட போட்டிகள் தினம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் கூண்டுக்குள் வானம் என்கிற பெயரில் புக் ஸ்டால் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதில் புத்தக தானப் பெட்டி என்று குறிப்பிடப்பட்டு அட்டைப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.இதில் புத்தக திருவிழாவிற்கு வருவோர் சிறந்த கருத்துடைய புத்தகங்களை வாங்கி இந்த பெட்டியில் தானமாக போடலாம்.இந்த புத்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறை கைதிகளுக்கு வழங்கப்படுகிறது. 

இந்த புத்தகங்களின் மூலம் சிறைக் கைகள் தங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளவும் மிகச்சிறந்த கருத்துக்களை உள் வாங்கி அவர்களுக்குள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் திருவாரூர் புத்தகத் திருவிழாவில் திருவாரூர் மாவட்ட உதவி சிறை அலுவலர் சசிகலா ஆனந்தன் ஆகியோர் தலைமையில் சிறைத்துறை ஊழியர்கள் சிறைக்கைதிகளுக்கு புத்தக தானம் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரங்களை புத்தக திருவிழாவிற்கு வருவோருக்கு கொடுத்து அதன் மூலம் புத்தகத்தை தானமாக பெற்று வருகின்றனர். 

அதன் அடிப்படையில் திருவாரூரில் நடைபெற்று வரும் இந்த புத்தகத் திருவிழாவின் மூலம் கடந்த இரண்டு நாட்களில் ஆயிரம் புத்தகங்கள் தானமாக பெறப்பட்டுள்ளது.

மேலும் 7 நாட்கள் இந்த புத்தக திருவிழா நடைபெற இருப்பதால் இன்னும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் தானமாக சிறைக் கைதிகளின் மறுமலர்ச்சிக்காக கிடைக்கும் என்று உதவி சிறை அலுவலர் ஆனந்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended