மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக பொதுகூட்டத்தில் மது போதையில் நின்ற அதிமுக தொண்டருக்கு சால்வை அணிவித்த மாவட்ட செயலாளர்.
செந்தில் முருகன்
UPDATED: Apr 1, 2024, 9:38:48 AM
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதமாக அதிமுக சார்பில் சாலையின் இருபுறமும் அலங்கார தோரணமாக வாழை மரங்கள், செங்கரும்பு கட்டப்பட்டு செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசி முடித்துவிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.
இதனிடையே அவர் சென்ற பிறகு சாலைகளில் இருபுறமும் அலங்கார தோரணங்களாக கட்டப்பட்டிருந்த வாழை மரங்களில் உள்ள வாழைத்தார்களை கட்சி தொண்டர்கள் போட்டி போட்டு மரத்தில் ஏறி பறித்து கொண்டு சென்றது வேடிக்கையாக இருந்தது.
மேலும் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை முடித்துவிட்டு சென்ற பின்னர் மேடையின் கீழே அதிமுக தொண்டர் ஒருவர் குடிபோதையில் படுத்து கிடந்தார். அவரை அங்கு இருந்த அதிமுக கட்சியினர் அவரை தூக்கி அனுப்பி வைத்தனர்.
அந்த மது பிரியர் வெளியே செல்லாமல் அங்கேயே தடுமாறி சுற்றி சுற்றி திரிந்தார். மேலும் அவரை மேடைக்கு அழைத்த மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மதுபிரியருக்கு துண்டு அணிவித்து வழி அனுப்பி வைத்தார்.